மண்டல கிராம வங்கிகளை இணைக்க மத்திய அரசு ஆலோசனை!

பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக மண்டல கிராம வங்கிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது!

Last Updated : Sep 23, 2018, 07:49 PM IST
மண்டல கிராம வங்கிகளை இணைக்க மத்திய அரசு ஆலோசனை! title=

பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக மண்டல கிராம வங்கிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது!

மண்டல கிராம வங்கிகள் தற்போது 56-ஆக இருக்கும்நிலையில், கிராம வங்கிகளை இணைத்து 36-ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் வசதி அதிகரிக்கும், வாராக்கடன் குறையும், சேவைகள் சிறப்பாக நிகழும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவிக்கையில்.... மாநில அரசுகளின் உதவியுடன் மண்டல பல்வேறு கிராம வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளை இணைப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த இணைப்பின் மூலம் வங்கிகளின் கடன்கொடுக்கும் தகுதி அதிகரிக்கும், மக்களுக்கான வங்கி சேவை விரைவாக அளிக்க இயலும். மேலும் தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்தி, செலவுகளைக் குறைக்கவும் முடியும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

RRB சட்டம் 1976-ன் கீழ் சிறுவிவசாயிகள், விவசாயக் கூலிகள், கிராமப்புற கலைஞர்களுக்கு கடன் அளிக்க கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தில், வங்கிகள் மூலதனத்தை பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

தற்போது மண்டல கிராம வங்கிகளில் 50% மத்திய அரசு, 35% ஸ்பான்ஸர் வங்கிகளும், 15% மாநில அரசும் வைத்துள்ளன. இந்த வங்கிகள் இணைப்பு ஏற்பட்டால் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் வரும். 

கடந்த 2005-ம் ஆண்டு முதல் மண்டல கிராம வங்கிகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 2005-ம் ஆண்டு 196 வங்கிகள் இருந்த நிலையில் 2006-ல் 136-ஆகக் குறைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டிற்குள் 82-ஆகக் குறைக்கப்பட்டு. தற்போது 56 வங்கிகள் உள்ள நிலையில் இதனை 36-ஆகக் குறைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது!

Trending News