இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் (77) உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்றிரவு மரணம் அடைந்தார். அஜித் வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் ஆடி 2,113 ரன்கள் சேர்த்துள்ளார். இவர் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
1970-களில் இந்திய அணியின் கேப்டனாக பொறுபேற்ற வடேகர் அணியை திறம்பட வழிநடத்தி சென்றதோடு அல்லாமல் சிறந்த இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்லிப் பீல்டராகவும் வலம் வந்தவர். அவரது தலைமையில் இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து (1-0) மற்றும் வெஸ்ட் இண்டீசில் (1-0) டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வரலாறு படைத்தது.
1974-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர், மேனேஜர், தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வடேகர் வகித்துள்ளார். இந்தியாவின் நான்காவது உயரிய விருதன பத்மஸ்ரீ விருது, அர்ஜூனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகளை அஜித் வடேகர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்றிரவு காலமானார். தற்போது இவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.