பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு பதவி விலக வேண்டும் - ராமதாஸ்

Last Updated : May 23, 2017, 02:37 PM IST
பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு பதவி விலக வேண்டும் - ராமதாஸ் title=

தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். எனவே பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு பதவி விலக வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை இன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு அமைக்கப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவை அக்கட்சியின் ஒரு பிரிவினர் இன்று கொண்டாடுகின்றனர். 

கடந்த 5 மாதங்களில் மூன்று முதல்-அமைச்சர்களையும், 5 முதல்-அமைச்சர் வேட்பாளர்களையும் பார்த்த இந்த அரசு, ஓராண்டைக் கவிழாமல் கடந்திருக்கிறது என்பதைத் தவிர இந்தக் கொண்டாட்டத்திற்கு வேறு காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

பதவி ஏற்ற ஓராண்டு காலத்திற்குள் எந்த அரசாவது இவ்வளவு வெறுப்பையும், கோபத்தையும் மக்களிடம் சந்தித்திருக்குமா? என்ற வினாவுக்கு, ‘இல்லை’ என்று மிகவும் எளிதாக பதிலளித்து விடலாம்.

கடந்த ஓராண்டை 3 முதல்-அமைச்சர்களின் உதவியுடன் நிறைவு செய்துள்ள இந்த அரசு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த ஒரு திட்டத்தையும் செயல் படுத்தவில்லை. 

தமிழகத்தில் 1921-ம் ஆண்டிலிருந்து கணக்கில் கொண்டால் 1991-96 காலத்திலான ஜெயலலிதா அரசு தான் மக்களின் அதிகபட்ச கோபத்திற்கு ஆளாகியிருந்தது. ஆனால், அதை விஞ்சும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர்.

இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து தமிழக மக்களிடம் பொதுக் கருத்துக் கணிப்பு நடத்துவதன் மூலம் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Trending News