)
EPFO : இபிஎப்ஒ, ரயில்வே உள்ளிட்ட துறைகளின் ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (நவம்பர் 5) நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC) பிரச்சாரம் 4.0-ஐ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம், முகம் அங்கீகரிக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தின் துணையுடன், ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறை வரலாறு காணாத வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
இனி ஓடி அலைய வேண்டாம்! முகம் போதும்:
இந்தச் சீர்திருத்தத்தை வெறும் நிர்வாக நடவடிக்கையாகப் பார்க்காமல், மனிதாபிமானப் பார்வை கொண்ட ஒன்றாகவே மத்திய அரசு பார்க்கிறது. "மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற, தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிக்க நேரில் ஓடி அலைய வேண்டும் என்பது மனிதாபிமானமற்ற செயல்" என்று அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த தொடக்க நிகழ்வின்போது அழுத்தமாகக் கூறினார். இந்த சிரமத்தைப் போக்கவே, பயோமெட்ரிக் மற்றும் முகம் அங்கீகாரத் தொழில்நுட்பத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்றார் அவர்.
இந்தத் தொழில்நுட்பம், முதியோர்களுக்கு இனிமையையும் கண்ணியத்தையும் அளிக்கிறது. கடந்த ஆண்டு பிரச்சாரத்தில் மட்டும், 52.73 லட்சத்துக்கும் அதிகமான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள், முகம் அங்கீகாரத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்தத் திட்டத்தின் பிரம்மாண்ட வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
ஒரு மாதத்தில் 2 கோடி இலக்கு:
நவம்பர் 1 முதல் 30 வரை நடைபெறும் இந்தப் பிரச்சாரம் 4.0, இந்த முறை 2 கோடி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களைப் பதிவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் நான்கு நாட்களிலேயே 55 லட்சத்துக்கும் அதிகமான சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டு, இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் செல்கிறது.
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஓய்வூதியதாரர்களைச் சென்றடைய, நாடு முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 2,500 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB)-இன் பங்கு அளப்பரியது. 1.8 லட்சம் போஸ்ட்மேன்கள் மற்றும் கிராமின் தக் சேவகர்கள் மூலம், வங்கி கணக்கைப் பற்றிக் கவலைப்படாமல் வீட்டிற்கே சென்று சான்றிதழ் சேவையை அவர்கள் அளிக்கின்றனர். DLC பிரச்சாரம் 4.0, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB), UIDAI, MeitY, EPFO, ரயில்வே, CGDA மற்றும் தொலைத்தொடர்புத் துறை போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.
குறிப்பாக, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) தனது 1.8 லட்சம் போஸ்ட்மேன்கள் மற்றும் கிராமின் தக் சேவகர்கள் மூலம் 1,600க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் துணைப் பிரிவுகளில் முகாம்களை ஏற்பாடு செய்கிறது. இவர்கள், ஓய்வூதியம் வழங்கும் வங்கியைப் பொருட்படுத்தாமல், வீட்டிற்கே சென்று DLC சேவைகளை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்குகிறார்கள்.
முந்தைய பிரச்சாரம் 3.0 கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. அப்போது, 845 மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் உள்ள 1,984 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு, மொத்தம் 1.62 கோடி DLC-கள் உருவாக்கப்பட்டன. இதில், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களிடமிருந்து மட்டும் 49.78 லட்சம் DLC-கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், 90 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களிடமிருந்து 85,200-க்கும் அதிகமானவையும், 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களிடமிருந்து 2,200-க்கும் அதிகமானவையும் சமர்ப்பிக்கப்பட்டன.
உலகமே திரும்பிப் பார்க்கும் இந்திய மாடல்:
ஓய்வூதிய விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மாற்றம், இந்தியர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குவதுடன், சமுதாயத்தை தொழில்நுட்ப ரீதியாக அணுகும் போக்கையும் மாற்றியுள்ளது. அமைச்சரின் கூற்றுப்படி, இந்த தனித்துவமான சீர்திருத்தம் இப்போது சர்வதேச அளவில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, பிற நாடுகள் இந்தியாவின் இந்த மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர். மத்திய அரசின் ஒரு சிறந்த திட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ