Central Government : முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.

Central Government : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொழில் துறையை ஊக்குவிக்க புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளது. முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்துக்கான ஒப்புதல் மத்திய அரசு கொடுத்திருக்கிறது. அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் ரூ.15,000/- வரை கிடைக்கும். அதே வேளையில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
உற்பத்தித் துறைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படும். 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் பிரதமரின் ஐந்து திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக 2024-25 மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இதன் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும்.
வேலைவாய்ப்பு ஊக்கத்தொகைத் திட்டம் நாட்டில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ரூ.99,446 கோடி செலவினத்துடன், 2 ஆண்டுகளில் உருவாக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றில், 1.92 கோடி பயனாளிகள் முதன்முறையாகப் பணியில் இணைபவர்களாக இருப்பார்கள். இந்தத் திட்டத்தின் நன்மைகள் 2025 ஆகஸ்ட் 01 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைகளுக்குப் பொருந்தும்.
இந்தத் திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் பகுதி அ என்பது முதல் முறையாக வேலை செய்பவர்களை மையமாகக் கொண்டது. பகுதி ஆ உரிமையாளர்களை மையமாகக் கொண்டது.
பகுதி அ: முதல் முறை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவுசெய்த முதல் முறை ஊழியர்களை இலக்காகக் கொண்டு, இந்தப் பகுதி இரண்டு தவணைகளில் ரூ.15,000 வரை ஒரு மாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை வழங்கும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்கள் இதற்கு தகுதி உடையவர்கள்.
பகுதி ஆ: உரிமையாளர்களுக்கு ஆதரவு:
இந்தப் பகுதி அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை உள்ளடக்கும், உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெறுவார்கள். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு நிலையான வேலைவாய்ப்புடன் கூடுதலாக பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு, மாதத்திற்கு ரூ.3000 வரை, உரிமையாளர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும். உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, ஊக்கத்தொகை 3-வது மற்றும் 4வது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ