Gold Price: இந்தியாவில் அதிக மக்களால் நம்பப்படும் ஒரு முதலீடு எது என்று கேட்டால், நிச்சயம் அதில் தங்கம் தான் முதன்மையான இடத்தை பிடிக்கும். தங்க ஆபரணங்கள் மீதான விருப்பம் ஒருபக்கம் என்றால், சுப காரியங்களுக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நம் நாட்டில் அதிகமாகவே காணப்படுகிறது எனலாம்.
Gold Price: இந்தியாவில் தங்கம்
அதன்படி பார்த்தோமானால், உலக நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில்தான் தங்கத்தின் மீது அதிக அதிகளவு மக்களால் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது எனலாம். உலக தங்க கவுன்சில் 2020-21ஆம் ஆண்டில் அளித்த தரவுகளின்படி, இந்திய குடும்பங்கள் சுமார் 23 ஆயிரம் டன் தங்கத்தை சேமித்து வைத்திருப்பதாக தெரிகிறது. அதுவும் உலகில் மக்கள் வைத்திருக்கும் மொத்த தங்கத்தின் அளவில், இது 11% என்றும் கூறப்படுகிறது.
Gold Price: டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பு...
சமீப நாள்களாகவே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களிலேயே சவரன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உயர்ந்திருந்தது. அதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே வரி விதித்து அதனை இன்று அறிவித்துள்ளார். இதுவும் உலக சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
Gold Price: உச்சத்தில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் இந்திய ரூபாயில் 2 லட்சத்து 59 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. ஒரு அவுன்ஸ் என்பது 28.3 கிராம் ஆகும். அந்த வகையில், சர்வதேச சந்தையில் கிராம் ஒன்று சுமார் ரூ.8,330 ஆக உள்ளது என கூறலாம். சென்னையை பொறுத்தவரை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.68,480 ஆகவும், ஒரு கிராம் ரூ.8,560 ஆகவும் உயர்ந்துள்ளது. விரைவில் கிராம் ரூ.10 ஆயிரத்தை எட்டும் என பலர் கூறி வருகின்றனர்.
Gold Price: தங்கம் விலை 38% குறையும் - கணிப்பு
இதனால், முதலீட்டாளர்களும், மக்களும் தொடர்ச்சியாக அதிர்ச்சியடைந்து வரும் நிலையில், அவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக 38% வரை குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புதான் பலரையும் வியக்க வைத்துள்ளது.
அதாவது, யாரும் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டிருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என அமெரிக்காவை சேர்ந்த பங்குச் சந்தை நிபுணரான ஜான் மில்ஸ் கணித்துள்ளாராம். அதாவது, கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 என்று இருந்த நிலையில், இதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.55,496 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
Gold Price: ஜான் வில்ஸ் கூறும் 3 காரணங்கள்
ஜான் மில்ஸ் இதற்கு 3 காரணங்களை சொல்கிறார். தங்கம் விலை அதிகரிப்பால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும்; தங்கத்தின் மீதிருக்கும் தற்போதைய டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறையாது; உலகில் உச்சம் தோடும் ஒன்று நிச்சயம் ஒருநாள் வீழ்ச்சி அடையும் என்பதை வரலாறு நெடுக பார்த்திருக்கிறோம் - என இந்த மூன்று காரணங்களால் தங்கம் விலை 38% குறையும் என்கிறார்.
Gold Price: கணிப்பு மெய்யாகுமா...?
ஆனால், இன்னும் சில பொருளாதார நிபுணர்களோ இவர் கூறும் காரணங்களை ஏற்க மறுக்கின்றனர். தங்கத்தின் டிமாண்ட் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றாலும் அது இந்தளவிற்கு வீழ்ச்சியை காணாது என்றும் சிலர் கூறுகிறார்கள். சர்வதேச அரசியல் நிலவரத்தை ஜான் வில்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். நிச்சயம் தங்கம் விலை 38% வீழ்ச்சி அடையாது என பலரும் கருத்துவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வருமான வரித்துறையின் படி ஆண் மற்றும் பெண் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









