)
Gold Investment News : தங்கம் விலையில் ஏற்பட்டு வரும் தொடர் ஏற்ற இறக்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிகரித்து வரும் ஆர்வத்திற்கு மத்தியில், எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனது இரு முக்கிய தங்கத் திட்டங்களில் ஒரே நேரத்தில் பெருந்தொகையை முதலீடு செய்வதற்கு தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜூன் 5 மற்றும் ஜூன் 8 ஆகிய தேதிகளில் இருந்து இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. மறு உத்தரவு வரும் வரை இக்கட்டுப்பாடுகள் தொடரும் என்பதால், முதலீட்டாளர்கள் புதிய விதிகளைப் புரிந்து கொண்டு முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பின்வரும் இரு திட்டங்களில் பெருந்தொகை முதலீடு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது:
எச்டிஎஃப்சி கோல்டு இடிஎஃப்: இத்திட்டத்திற்கான புதிய கட்டுப்பாடு ஜூன் 8, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
எச்டிஎஃப்சி கோல்டு இடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்: இத்திட்டத்திற்கான கட்டுப்பாடு ஜூன் 5, 2026 அன்று மதியம் 3:00 மணிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்களுக்குப் பொருந்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் வகையைப் பொறுத்து ஃபண்ட் ஹவுஸ் வெவ்வேறு வரம்புகளை நிர்ணயித்துள்ளது:
HDFC Gold ETF விதிமுறை: ஜூன் 8 முதல், எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்டில் நேரடியாகக் குறைந்தபட்சம் ரூ.25 கோடி அல்லது அதற்கு மேல் பெருந்தொகையாக முதலீடு செய்ய விரும்பும் பெரிய முதலீட்டாளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
HDFC Gold ETF FoF விதிமுறை: இது பொதுவான முதலீட்டாளர்களுக்கான கட்டுப்பாடாகும். இதன் படி, ஒரு காலண்டர் மாதத்தில் ஒரு பான் கார்டுக்குஅதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மட்டுமே பெருந்தொகையாகவோ அல்லது பிற ஃபண்டுகளில் இருந்து மாற்றியோ முதலீடு செய்ய முடியும். இந்த வரம்பு முதல் கணக்கு வைத்திருப்பவரின் அடிப்படையில் சரிபார்க்கப்படும்.
இந்த இரு மாற்றங்களைத் தவிர, இத்திட்டங்களின் மற்ற அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் வழக்கம் போலவே தொடரும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
HDFC Gold ETF: டிசம்பர் 28, 2022 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு (AUM) ஏப்ரல் 30, 2026 நிலவரப்படி ரூ.69.72 கோடியாக உள்ளது. கடந்த ஓராண்டில் இத்திட்டம் 4.01% நஷ்டத்தைச் சந்தித்திருந்தாலும், தொடங்கப்பட்டதில் இருந்து சராசரியாக 8.27% வருடாந்திர கூட்டு வளர்ச்சியை (CAGR) வழங்கியுள்ளது.
HDFC Gold ETF FoF: நவம்பர் 1, 2011 அன்று தொடங்கப்பட்ட மிகவும் பழமையான திட்டமான இதன் மொத்த சொத்து மதிப்பு ஏப்ரல் 30, 2026 நிலவரப்படி ரூ.11,464 கோடி என்ற பிரம்மாண்ட நிலையை எட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இத்திட்டம் 57.05% என்ற அதிரடி வருவாயை அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், தொடங்கப்பட்டதில் இருந்து சராசரியாக 11% வருடாந்திர வருவாயை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.
தங்க இடிஎஃப் மற்றும் கோல்டு எஃப்ஓஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யத் திட்டமிடுபவர்கள் இந்த புதிய முதலீட்டு வரம்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தவர்கள், தங்களின் முதலீட்டு உத்திகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.