Income Tax : சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணைக்கு வாடகை செலுத்தி வரிச் சலுகை பெறும் நடைமுறையில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டத்தின்படி, இனி குடும்ப உறுப்பினர்களுக்கு வாடகை கொடுப்பவர்கள் தங்களின் உறவுமுறையை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை ஆப்சன்
வீட்டு வாடகை செலுத்தும் வழிமுறையை இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்கள் வரிச் சேமிப்பு செய்கின்றனர். குறிப்பாக, சொந்த ஊரை விட்டுப் பணிபுரிபவர்கள் அல்லது சொந்த வீட்டிலேயே வசித்தாலும் பெற்றோருக்கு வாடகை கொடுத்து வரிச் சலுகை பெறுவது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வசதியைத் தவறாகப் பயன்படுத்திப் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்க, மத்திய அரசு வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழ் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இனி கட்டாயம்
தற்போதைய நடைமுறைப்படி, ஒரு ஊழியர் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் வாடகை செலுத்தினால், நில உரிமையாளரின் PAN எண்ணை மட்டும் வழங்கினால் போதுமானது. ஆனால், புதிய வரைவு விதிகளின்படி, வாடகை பெறுபவர் உங்கள் தந்தை, தாய், கணவர், மனைவி அல்லது உடன்பிறந்தவரா என்பதை வருமான வரிப் படிவத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதன் மூலம், குடும்பத்திற்குள் நடக்கும் பணப் பரிமாற்றங்களை வருமான வரித்துறை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றம்
குடும்ப உறுப்பினர்களுக்கு வாடகை கொடுப்பது சட்டப்படி தவறல்ல என்றாலும், அது உண்மையான வாடகை ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
1. வாடகை ஒப்பந்தம்: முறையான முத்திரைத்தாளில் வாடகை ஒப்பந்தம் (Rent Agreement) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2. பணப் பரிமாற்றம்: வாடகையைப் ரொக்கமாகக் கொடுக்காமல், வங்கி கணக்கு (Cheque or UPI) மூலம் செலுத்துவது அவசியம். இதுவே ஒரு வலுவான ஆதாரமாக அமையும்.
வருமான வரித் தாக்கல்: நீங்கள் யாருக்கு வாடகை கொடுக்கிறீர்களோ, அதாவது பெற்றோர் அல்லது மனைவிக்கு கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் தங்களின் வருமான வரித் தாக்கலில் அந்த வாடகைத் தொகையை வருமானமாகக் காட்ட வேண்டும்.
வரி ஏய்ப்புக்கான கடும் அபராதங்கள்
புதிய சட்டத்தின் கீழ், போலி ரசீதுகள் மூலம் வரிச் சலுகை பெறுவது வருமானத்தை மறைத்தல் அல்லது தவறான தகவல் அளித்தல் என்ற பிரிவின் கீழ் வரும். ஒருவேளை வருமான வரித்துறை ஆய்வில் உங்கள் வாடகை கோரிக்கை போலியானது எனத் தெரியவந்தால், நீங்கள் ஏய்ப்பு செய்த வரித் தொகையில் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம். இதனுடன் வட்டி மற்றும் சட்ட ரீதியான நோட்டீஸ்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர் காட்டும் வருமானத்திற்கும் நீங்கள் காட்டும் வாடகைக்கும் இடையில் முரண்பாடு இருந்தால், தொழில்நுட்ப ரீதியான தரவு ஆய்வின் மூலம் அது எளிதாகக் கண்டறியப்படும்.
வருமானவரி துறையிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள்
2026 ஏப்ரல் முதல் பழைய வருமான வரிச் சட்டம் 1961 முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் அமலுக்கு வருவதால், வரித் தாக்கல் செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப் போகிறது. எனவே, குடும்ப உறுப்பினர்களுக்கு வாடகை கொடுக்கும் ஊழியர்கள், அது சந்தை மதிப்புக்கு ஏற்ற நியாயமான வாடகையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முறையான ஆவணங்கள் இன்றி செய்யப்படும் HRA கோரிக்கைகள் இனி வருமான வரித்துறையின் பிடியில் சிக்க வாய்ப்புகள் அதிகம்.
மேலும் படிக்க | 10 ஆயிரம் ரூபாயை ரூ.2 லட்சமாக மாற்றுவது எப்படி? சூப்பர் ஐடியா
மேலும் படிக்க | Gold Price Today : இன்றைய தங்கம் விலை! மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான செய்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









