)
NEEDS Scheme: தமிழ்நாடு அரசு, முதல் தலைமுறைப் பட்டதாரிகளைத் தொழில் முனைவோராக மாற்றும் மகத்தான நோக்கத்துடன், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் (NEEDS - New Entrepreneur cum Enterprise Development Scheme) என்ற சிறப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. படித்த இளைஞர்கள் மற்றும் மகளிர் தொழில் தொடங்க, மானியம் மற்றும் வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்துக்கு தகுதியானவர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, எவ்வளவு கடன் கிடைக்கும்?, தேவையான ஆவணங்கள் என்ன? என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
NEEDS திட்டம் என்றால் என்ன?
NEEDS திட்டம் என்பது முதல் தலைமுறைத் தொழில்முனைவோருக்கான ஒரு நிதியுதவித் திட்டமாகும். உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களைத் தொடங்க வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம் கடன் பெற்று, அதற்கு அரசின் மானியத்தைப் பெற இத்திட்டம் உதவுகிறது.
NEEDS திட்டம் : கடன் மற்றும் மானியம் விவரம்
இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.10.00 இலட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25% மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.75.00 இலட்சம் ) நிதியுதவி வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீத மானியத்துடன் கூடுதலாக 10 சதவீதம் மானியம் (அதிகபட்ச உச்சவரம்பு ரூ.75.00 இலட்சம்) வழங்கப்படும். மேலும் அனைத்து பிரிவினருக்கும் 3% பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
கடன் பெற தகுதிகள் :
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர், பெண்கள், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர்களுக்கு வயது 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
கல்வித் தகுதியாக பன்னிரண்டாம் வகுப்பு, பட்டபடிப்பு பட்டயபடிப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழிற் சார் பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் இத்திட்டத்தின் கீழ் உடன் விண்ணப்பிக்கலாம்.
பயனாளிகள் பங்களிப்பு :
இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொது பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் (பெண்கள்/ பிற்பட்ட வகுப்பினர்/மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறுபான்மையினர்/ திருநங்கைகள் /
மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்) 5 சதவிகிதம் தங்களது பங்காக செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (www.msmeonline.tn.gov.in/needs) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையங்களை தொடர்பு கொள்ளலாம். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ