)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 2025ம் ஆண்டின் வருமான வரி மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் நோக்கத்துடன், 2025 பிப்ரவரி 13ம் தேதியன்று மக்களவையில் மசோதாவை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பிறகு, இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
நவீன, நெறிப்படுத்தப்பட்ட சட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மசோதா, சிக்கலைக் குறைக்கவும், வரி முறையை மேம்படுத்தவும், புகார்களைக் குறைக்கவும், இணக்கத்தை மேம்படுத்தவும் உதவும். புதிய சட்டம் எளிமையானதாக இருக்கும். தற்போதைய சட்டத்தில் உள்ள 5.12 லட்சம் சொற்களுடன் ஒப்பிடும்போது 2.6 லட்சம் சொற்கள் மட்டுமே இருக்கும். பிரிவுகளின் எண்ணிக்கையும் 819 என்ற அளவில் இருந்து 536 என்ற அளவாக குறைந்துள்ளது. மேலும் அத்தியாயங்கள் 47 என்ற அளவில் இருந்து 23 என்ற அளவாகக் குறைக்கப்பட்டுள்ளன.
வருமான வரி மசோதா, 2025, 57 அட்டவணைகளைக் கொண்டுள்ளது, இது ஏற்கனவே உள்ள சட்டத்தில் உள்ள 18 என்ற அளவை விட அதிகமாகும். ஆனால் 1,200 க்கும் மேற்பட்ட விதிகள் மற்றும் 900 விளக்கங்கள் நீக்கப்படும்.
எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்கள் மற்றும் அம்சங்கள்
1. "முந்தைய ஆண்டு" மற்றும் "மதிப்பீட்டு ஆண்டு" என்ற கருத்தை ஒற்றை "வரி ஆண்டு" மூலம் மாற்றுவது மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும். தற்போதைய அமைப்பின் கீழ், ஒரு நிதியாண்டில் (2023–24 என்று சொல்லலாம்) ஈட்டப்பட்ட வருமானம் அடுத்த மதிப்பீட்டு ஆண்டில் (2024–25) வரி விதிக்கப்படுகிறது. புதிய மசோதா இந்த இரண்டுசொற்களை நீக்கி, வரி தாக்கல் மற்றும் வருமானத்தை ஒற்றை ஆண்டு அமைப்புடன் சீரமைக்க முன்மொழிகிறது.
2. தற்போதைய பொருளாதார யதார்த்தங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் வரி முறையை நவீனமயமாக்குவது இதன் நோக்கமாகும். இந்த மசோதாவில் டிஜிட்டல் ஆவணங்கள், தெளிவான வழிகாட்டுதல்கள், புகார்களுக்கு தீர்வு வழங்குவதற்கான கட்டமைப்புகள் மற்றும் சர்வதேச வரிவிதிப்பு தரநிலைகள் ஆகியவற்றுக்கான விதிகளும் அடங்கும்.
3. ஜூலை 21 அன்று, பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான மக்களவையின் தேர்வுக் குழு, வரைவு மசோதா குறித்த தனது அறிக்கையை சமர்ப்பித்தது. 31 எம்பிக்கள் கொண்ட குழு, முன்மொழியப்பட்ட சட்டத்தை ஆழமாக மதிப்பாய்வு செய்து 285 பரிந்துரைகளை வழங்கியது. அனைத்தும் விரிவான 4,500 பக்க அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளன.
4. புதிய மசோதாவில் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என வருமான வரித்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள விதிகளை எளிமைப்படுத்துவதும், தேவையற்ற சிக்கல்களை நீக்குவது மட்டுமே இதன் நோக்கமாக இருக்குக்
5. வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வது எளிதாக தாக்கல் செய்யும் நோக்கில், புதிய வருமான வரி மசோதாவில், சம்பளம் தொடர்பான அனைத்து விதிகளும் ஒரே பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
6. பணிக்கொடை, ஓய்வூதியம், விருப்ப ஓய்வு மற்றும் பணி நீக்கம் தொடர்பான இழப்பீடு போன்ற பலன்கள் சம்பளப் பிரிவிலேயே வைக்கப்படும். இது வரி செலுத்துவோருக்கு மேலும் எளிதானதாக இருக்கும்
7. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் தொடர்பான விதிகளும் அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும். இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கும் (NGOs) சட்ட விதிகளின் மொழி எளிதாக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதாவில் முக்கிய முன்னேற்றங்கள்
புதிய வருமான வரி மசோதா, 2025 வரிச் சட்டங்களை எளிமையாகவும் பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அணுகலை மேம்படுத்த இது எளிமைப்படுத்தப்பட்ட மொழியைப் பயன்படுத்துகிறது. பல்வேறு கடந்த கால திருத்தங்களை ஒருங்கிணைக்கிறது.
மசோதாவின் இறுதித் தாக்கல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்துவோர், வணிகங்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக மிக முக்கியமான வரி சீர்திருத்தமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.