)
PM Kisan 21st Installment Update: தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு இத்திட்டத்தில் ஆண்டுதோறும் 6000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு செலுத்தி வருகிறது. இத்திட்டத்தில் விரைவில் 21வது தவணைத்தொகை செலுத்தப்பட உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், பிஎம் கிசான் தொகை திட்டத்தில் 21வது தவணைத்தொகை பெற விவசாயிகள் செய்ய வேண்டிய அப்டேட் குறித்து அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகின்றனர்.
நிலவுடைமை அடையாள எண்
அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ; செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் 27, 000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது இடுபொருட்களின் செலவுக்காக வருடந்தோறும் ரூ.6000 பெற்று வருகின்றனர். இத்தொகையினை பெறுவதற்கு பல்வேறு காரணிகளை பூர்த்தி செய்வது அத்தியாவசியமாகிறது. நிலவுடைமை அடையாள எண்ணை பெறுவது இப்பலனை பெறுவதற்கான முக்கிய காரணியாக உள்ளது. 20-வது தவணை பெற்ற விவசாயிகளில் 8396 பேர் இதுவரை அடையாள எண் பதிவினை மேற்கொள்ளவில்லை என தெரிய வருகிறது.
நிலவுடைமை அடையாள எண் பெறுவது எப்படி?
மேற்படி அடையாள எண்ணை பெற தங்கள் வட்டார வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிக கள பணியாளர்களுக்கு இப்பணியினை மேற்கொள்வதற்கான செயலி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களை அணுகியோ அல்லது வெளியூரில் வசிக்கும் விவசாயிகள் எந்தவொரு பொதுசேவை மையத்தையோ அணுகி கடவு எண் (OTP) மூலமாக எளிதாக பதிவு செய்யலாம். விவசாயின் ஆதார் எண்ணை செயலியில் பதிவு செய்தவுடன் அந்த கிராமத்தில் உள்ள அன்னாரது தனி மற்றும் கூட்டுப்பட்டாவில் உள்ள அனைத்து புல எண்கள் மற்றும் உட்பிரிவுகள் உரிய பரப்பளவுடன் செயலியில் காண்பிக்கும். இதனை விவசாயி OTP-யின் மூலம் உறுதி செய்த பின் பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண்ணை பெறலாம். விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில்21-வது தவணையை விடுபடாமல் பெற நிலவுடைமை அடையாள எண் பதிவினை உடனடியாக தங்கள் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இதேபோல், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் இன்னொரு அறிவிப்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் காணப்படும் தண்டு துளைப்பான், புகையான், இலைச்சுருட்டுப்புழு மற்றும் உவர் தன்மையினால் ஏற்பட்டுள்ள பாசிகளை கட்டுப்படுத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில், மாறிவரும் தட்பவெட்பநிலை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1437 எக்டர் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில், ஒருசில இடங்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும் இலை சுருட்டுப்புழு தாக்குதல் தென்படுகிறது. தண்டு துளைப்பான் தாக்குதலில் இளம்பயிர் நடுக்குருத்து வாடி காய்ந்து விடும். நெல்மணிகள் பால் பிடிக்காமல் பதராகி வெண் கதிர்களாக காணப்படும். இலைச்சுருட்டுப் புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்து பச்சையத்தை சுரண்டி வெண்மையாக காணப்படும். புகையான் தாக்கிய பயிர்களில் காய்ந்து "பயிர் தீய்ந்தது" போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும், சில இடங்களில் நெல் வயல்களில் உவர் தன்மையினால் பாசி வளர்ச்சி தென்படுவதுடன் பயிர்கள் கருகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள நெல் வயல்களில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களுடன் கூட்டாக வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதர இடங்களிலும் பொருளாதார சேத நிலை குறித்து வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, விவசாயிகள் தங்கள் நெல் வயல்களில் மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால், வட்டார வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்டுத்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு புளுபென்டியமைடு 20% WG 50 கிராம் (அல்லது) கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP 400 கிராம் என்ற அளவிலும். புகையான் தாக்குதல்களை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு பைமெட்ரோசின் 50% WG 120 கிராம் குளோதையானிடின் 50% WG 8-9.6 கிராம், டினோடிபியூரான் 20% SG 60-80 கிராம் மற்றும் பிப்ரோனில் 5% Sc 400 மில்லி என்ற அளவிலும், நெல் இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு புளுபென்டியமைடு 20% WG 50 கிராம் (அல்லது) புளுபென்டியமைடு 20% W/W SC 20 மிலி (அல்லது) கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50% SP 400 கிராம் (அல்லது) குளோரான்ட்ரனிலிபுரோல் 18.5% SC 60 மி.லி என்ற அளவிலும், வயல்களில் பாசி படர்ந்திருந்தால் ஏக்கருக்கு ஒரு கிலோ காப்பர் சல்பேட்டினை 20 கிலோ மணலுடன் கலந்து தண்ணீர் பாயக்கூடிய 10 இடங்களில் பைகளில் கட்டி வைக்கவும், ஏக்கருக்கு 1 கிலோ 19:19:19 காம்ப்ளக்ஸ் உரத்தை இலை வழியாக தெளித்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்திடவும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பசுந்தாள் உரப்பயிர்கள் பயன்படுத்தவும், யூரியா, டிஏபி போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்தவும், நெல் சாகுபடியை தொடர்ச்சியாக மேற்கொள்வதை தவிர்த்து பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, விவசாயிகள் தங்கள் வயல்களில் பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ