PM Kisan : பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (பி.எம் கிசான்) திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ. 6,000/- நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து தங்களது வங்கிக் கணக்குகளில் பெற்று வருகின்றனர். இந்தத் தொகை, விவசாய இடுபொருட்கள் செலவினங்களுக்காக நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000/- வீதம் வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் 21வது தவணைத் தொகை செலுத்தப்பட உள்ளது.
இந்த 21வது தவணைத் தொகையைப் பெறுவதற்கு, விவசாயிகள் சில அத்தியாவசிய அப்டேட்களை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகின்றனர். இவற்றில் முக்கியமானது, 'நிலவுடைமை அடையாள எண்' அல்லது 'தனித்துவ விவசாய அடையாள எண்' பெறுவது ஆகும். இந்த அடையாள எண் இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளைச் செயல்படுத்த முக்கிய காரணியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், பி.எம் கிசான் நிதி உதவித் தொகை பெறுவதற்குத் தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 86 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வருகின்றனர். இவர்களில், சுமார் 23,297 நபர்கள் இதுவரை தனித்துவ விவசாய அடையாள அட்டை பெறாமல் உள்ளனர்.
21வது தவணைத் தொகையைப் பெறுவதற்கு, விவசாயிகள் விரைவாக இந்த அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு, அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, ஆதார் எண், ஆதாருடன் இணைப்பிலுள்ள கைப்பேசி எண் மற்றும் சிட்டா நகலைக் காண்பித்து உடனடியாகத் தனித்துவ விவசாய அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் 21வது தவணைத் தொகை பெறுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் 21வது தவணையைத் தடையின்றிப் பெறுவதற்கும், இனி வரும் காலங்களில் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் இந்த நிலவுடைமை/தனித்துவ விவசாய அடையாள எண் பதிவினைத் தங்கள் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தை அல்லது பொது சேவை மையத்தை உடனடியாகத் தொடர்பு கொண்டு முடித்துக் கொள்வது அவசியமாகும்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 27,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனாளிகளாக உள்ளனர். இவர்களில், 20வது தவணையைப் பெற்ற விவசாயிகளில் கூட சுமார் 8,396 பேர் இதுவரை நிலவுடைமை அடையாள எண் பதிவினை மேற்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலவுடைமை அடையாள எண்ணைப் பெறுவதற்கு, விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிக களப் பணியாளர்களை அணுகலாம். வெளியூரில் வசிக்கும் விவசாயிகள் பொது சேவை மையத்தை அணுகி கடவுச்சொல் (OTP) மூலமாக எளிதாகப் பதிவு செய்யலாம். விவசாயியின் ஆதார் எண்ணைச் செயலியில் பதிவு செய்தவுடன், அந்த கிராமத்தில் உள்ள அவரது தனி மற்றும் கூட்டுப்பட்டாவில் உள்ள அனைத்துப் புல எண்கள் மற்றும் உட்பிரிவுகள் உரிய பரப்பளவுடன் காண்பிக்கப்படும். இதனை விவசாயி OTP-யின் மூலம் உறுதி செய்த பின் பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண்ணைப் பெறலாம்.
மேலும் படிக்க | PM Kisan 21வது தவணை தாமதமாகுமா? ஒரே வீட்டில்.... அம்பலமான மிகப்பெரிய மோசடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









