)
Farmers Schemes : பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பு பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிறப்பு பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி 15.11.2025-லிருந்து 30.11.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சிறப்பு பருவ நெற்பயிருக்கு காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு ரூ.545/- செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம். காப்பீடு செய்வதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / இ- சேவை மையங்கள் ஆகியவற்றில் காப்பீடு செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்கு முன்னதாகவே காப்பீடு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மத்திய அரசின் பயிர்க்காப்பீடு
எனவே, சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிருக்கு கடன் பெறும் விவசாயிகள் சொந்த விருப்பத்தின்பேரில் பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் விருப்பக் கடிதத்தினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ வழங்கி தங்கள் பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ அல்லது தேசிய பயிர் காப்பீடு இணையதளத்திலுள்ள விவசாயிகள் கார்னரில் நேரடியாகவோ 30.11.2025 -க்குள் காப்பீடுசெய்யலாம்.
பயிர்க்காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழி விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் அல்லது விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்தியப்பின் அதற்கான இரசீதினை பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி மானிய கடன்
தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் ஆகியன வேளாண் உட்கட்டமைப்பு நிதி எனும் திட்டம் மூலம் கடன் வசதி பெறலாம். விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை வீணாக்காமல் நல்ல முறையில் சேமிப்பதற்கும் மதிப்பு கூட்டி இலாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது மிக அவசியமானதாகும்.
உற்பத்தி செய்த வேளாண்பொருட்களைச் சேமித்து அல்லது பதப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் அதிக விலை கிடைப்பதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான நிதி வேளாண் உட்கட்டமைப்பு நிதி எனும் திட்டம் மூலம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. தென்காசி மாவட்டத்திற்கு 59 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தொழில்கள் செய்யலாம்?
இத்திட்டத்தின் கீழ் சேமிப்பு கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிட தரம்பிரிக்கும் அறைகள், மின்னணு வணிக மையம், குளிர்பதன கிடங்கு, சூரிய மின் வசதியுடன் கூடிய கட்டமைப்புகள், ரீஃபர்வேன், முதன்மை பதப்படுத்தும் நிலையங்களான அரிசி ஆலை, பயறு ஆலைகள் அமைத்தல், ட்ரோன் வாங்குதல், இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு மையம் அமைத்தல், பசுமை குடில் அமைத்தல், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல் போன்றவைகளுக்கு நிதி உதவி பெறலாம்.
விவசாயிகள் யாருக்கு ரூ.2 கோடி மானிய கடன் கிடைக்கும்?
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் ஆகியன இத்திட்டத்தின் கீழ் கடன் வசதி பெற இயலும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதம் மட்டுமே. ரூபாய் 2 கோடி வரை கடன் பெறலாம். வட்டி விகிதத்தில் 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவிகிதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும். மத்திய அரசு மற்றும் மாநில அரசில் பல்வேறு திட்டங்களின் மானியத்தையும் இணைத்தே பெற்றுக்கொள்ளும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது. எனவே, இத்திட்டத்தில் நிதி உதவி பெற விரும்பும் நபர்கள் தங்கள் திட்டத்திற்கான விபரங்களுடன் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ