Tamilnadu Government : வேளாண் பட்டதாரிகள் மற்றும் விவசாயிகளுக்காக தமிழ்நாடு அரசு மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Tamilnadu Government : வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையங்கள் அமைப்பதற்கும், விவசாயிகள் 100 விழுக்காடு மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசிடமிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டங்களுக்கு எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
திருவாரூர் - உழவர் நல சேவை மையங்கள்
திருவாரூர் மாவட்டத்தில், வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டய வேளாண்மை படித்தவர்கள் பயன்பெறும் வகையில் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட 2025-26 ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. உழவர் நல சேவை மையங்கள் நிறுவுவதற்கு ஆகும் மதிப்பிடப்பட்ட செலவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்கு, 30% மானியமாக ரூ.3 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரை வழங்கப்பட உள்ளது. இந்த மையங்கள் விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள் மற்றும் விவசாயத் தேவைகளை வழங்கக் கூடிய ஆதரவு மையங்களாக செயல்பட வேண்டும். கூடுதலாக விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் வழிக்காட்டுதல்கள் வழங்கும் மையங்களாக செயல்பட வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வேளாண் பட்டதாரி அல்லது பட்டய வேளாண்மை படித்தவராக இருத்தல் வேண்டும். பயன்பெற விரும்புவோர் விரிவான திட்ட அறிக்கையுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி - நுண்ணீர் பாசனம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்திடும் சிறுகுறுவிவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்பாசனம் அமைத்திட இலக்கீடுகள் பெறப்பட்டு வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் உளுந்து, பாசி, பருத்தி, எள், நிலக்கடலை, கம்பு, மக்காச்சோளம், சோளம், சிறுதானியங்கள் மற்றும் வேளாண்காடு வளர்ப்பில் வளர்க்கப்படும் மகாகனி,செம்மரம், தேக்கு,சவுக்கு போன்ற மர பயிர்களுக்கு நுண்ணீர்பாசனம் அமைத்திடலாம். நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேளாண்துறை மூலம் 600 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர்பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.2.77 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 200 ஹெக்டேர் வரை இலக்கீடு பெறப்பட்டு விவசாயிகள் தேர்வு செய்யப்படும் பணி நடைப்பெற்றுவருகிறது.
இத்திட்டத்தில் 5.00 ஏக்கர் பரப்பளவு வரையில்,சிறுகுறுவிவசாயிகளுக்கு சிறுகுறு விவசாயி சான்றின் அடிப்படையில்100 சதவீத மானியத்தில் நுண்ணீர்பாசனம் அமைப்பு நிறுவப்படும். ஏனைய பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் நுண்ணீர்பாசன அமைப்பு நிறுவப்படும். நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற சிட்டா, அடங்கல், ஆதார், குடும்ப அட்டை நகல், சிறுகுறு விவசாய சான்று. வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படத்துடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம் குறைந்த நீரில் அதிகபரப்பில் சாகுபடி செய்யலாம். வாய்க்கால்வழி நீர்விரயம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு நீர்பயன்பாட்டு திறன் அதிகரித்து, பயிர் வறட்சியால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. மேலும் உர பயன்பாடும் குறைக்கப்படுகிறது. களைகள் வளர்ச்சி மற்றும் பூச்சி, நோய்தாக்குதலும் குறைவாகவே உள்ளது. விவசாயிகள் நுண்ணீர்பாசனம் பதிவு மேற்கொள்கையில் இத்திட்டத்துடன் தொடர்புடைய துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்திலும் பதிவு செய்து பயனடையலாம். நீர் சேகரிப்பு அமைப்பு அல்லது பண்ணை குட்டை நிறுவிட 50 சதவீத மானியம்-அதிகபட்சமாக ரூ.75000/-வரை வழங்கப்படுகிறது.
ஆழ் குழாய்கிணறு அல்லது ஆழ்துளைகிணறு அமைத்திட 50 சதவீத மானியம்- அதிகபட்சமாக ரூ.25000/-வரை வழங்கப்படுகிறது. நீர் கடத்தும் குழாய் அமைத்திட 50 சதவீத மானியம்- அதிகபட்சமாக ரூ.10000/-/ஹெக்டர் வரை வழங்கப்படுகிறது. நீர் ஏற்றும் கருவி அல்லது மின்மோட்டார் அல்லது ஆயில் மோட்டாருக்கு 50 சதவீத மானியம்- அதிகபட்சமாக ரூ.15000/-வரை வழங்கப்படும். எனவே விவசாயிகள் குறைந்த நீர் செலவில் அதிக பரப்பளவில் பயிர்சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசனத் திட்டத்திலும், துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்திலும் பதிவு செய்து பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தூத்துக்குடி - வாழைப்பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காரீஃப் பருவத்தில் வாழைப் பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு (2025- 2026 பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்திட KSHEMA காப்பீட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாழைப்பயிருக்கு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி (16.09.2025) காப்பீடு செய்ய கடைசி நாளாக அரசினால் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட தேதிக்குள் இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாழை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய பிரிமீயம் தொகை ஏக்கருக்கு ரூ.4480/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகளுக்கு மகசூல் இழப்பீட்டின் அடிப்படையில் காப்பீட்டு இழப்பீடு தொகை சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்யும் போது விவசாயியின் பெயர், வங்கிக் கணக்கு எண், சாகுபடி செய்த கிராமத்தின் பெயர். சாகுபடி செய்த பயிரின் பரப்பு, புல எண், முழு முகவரி ஆகிய விபரங்களை சரிபார்த்த பின்பு பொது இ சேவை மையங்களில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ள பெயருக்கும், ஆதார் அட்டையில் உள்ள பெயருக்கும் இடையே வேறுபாடு காணப்படின் ஆதார் அட்டையில் உரிய திருத்தங்கள் மேற்கொண்ட பின் இணையத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். மாவட்ட கண்காணிப்பு குழு அறிவுறுத்தலின் படி, பொது இ- சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்ய வரும் விவசாயிகள் அடங்கல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற முத்திரையிடுதலினை பொது இ சேவை மையங்கள் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்ட அடங்கள் பதிவுகள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படாத வகையில் பாதுகாக்கப்பட்டு பயனாளிக்கு இழப்பீடுத் தொகை விரைந்து கிடைக்க பொது இ-சேவை மையங்களும் பங்களிப்பு நல்கி இத்திட்டத்தினை பயனுள்ள வகையில் பயனாளிகள் பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ