)
Kanimozhi Santhosh : புதிதாக ஆட்சியமைத்திருக்கும் தவெக கட்சியின் மீது, முதல் நாளில் இருந்தே எதிர்கட்சிகள் அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்து வருகின்றன. புதிய கட்சியாக பிறந்து, ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசை 6 மாதத்திற்கு தொந்தரவு செய்ய மாட்டோம் என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் கூறியிருந்தாலும், அரசு விழாக்களில் மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்ட போதும், விஜய் தனது ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த போதும் முதல் ஆளாக அதனை வன்மையாக கண்டித்தது. திமுக கூட்டணி கட்சிகளான, சிபிஐ, சிபிஐஎம், விசிக உள்ளிட்டவை தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தாலும் ஜோதிடருக்கு பதவி கொடுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது மட்டுமன்றி, தவெக எம்.எல்.ஏக்கள் பலர் படிப்பு சான்றிதழ் விவகாரத்திலும், தற்போது ‘சோபா’ சர்ச்சையிலும் சிக்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் சார்பாக கனிமொழி சந்தோஷ் கவுண்டம்பாளையம் தொகுதியில் நின்று அதிமுக வேட்பாளர் அருண்குமாரை 42140 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி 146466 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். சில நாட்களுக்கு முன்பு தலைமைச்செயலகத்தில் நடந்த பதவியேற்பு விழாவிலும், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
37 வயதான கனிமொழி, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், ஒரு காணொளியில், "புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்தால் ஒருவர் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு எவ்வளவு உள்ளது என்பதைக் கூட ஜோதிடம் மூலம் அறியலாம்" என பேசியிருந்தது தேர்தலுக்கு முன்னரே சர்ச்சையானது.
கனிமொழி, தவெகவில் சீட் கிடைப்பதற்கு முன்பாக இணையதளத்தில் பிரபலமான ஒருவராக இருந்தார். ‘ஜோதிடத்தின் மூலம் கேன்சரை குணப்படுத்தலாம்..குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருந்தால் ஜோதிடத்தில் வழி இருக்கிறது..” என்றெல்லாம் இவர் கொடுத்த நேர்காணல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஜோதிடராக இருந்த இவரை, பலரும் ‘டாக்டர் கனிமொழி’ என்று அழைத்து வந்தனர். சமீபத்தில், செய்தியாளர்களை இவர் சந்தித்த போது இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் ஜோதிடத்தில் முனைவர் பட்டம் (Doctorate) வாங்கியிருப்பதால் தன்னை பலரும் ‘டாக்டர் கனிமாெழி’ என அழைப்பதாகவும் விளக்கினார். கூடவே, தெழில் ரீதியாக தான் ஒரு வழக்கறிஞர் என்றும் கனிமொழி தெரிவித்தார்.
கனிமொழி, சில நாட்களுக்கு முன்பு ஐஏஸ் அதிகாரிகளை சந்தித்த போது அவர் சோபாவில் அமர்ந்து கொண்டு அவர்களை ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்ததாக கூறி சர்ச்சை எழுந்தது. இதை பார்த்த பலரும், “இவங்க என்ன பெரிய மகாராணியா?” என்று கேள்வியெழுப்பினர். இது குறித்து கனிமொழி விளக்கமளித்து தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், அவர்களை தான் லெதர் சேரில்தான் அமர வைத்ததாகவும், இது ஆபிஸ் இல்லை தனது ஜோதிட அலுவலகம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தன்னுடைய அலுவலகத்தை சுற்றிக்காண்பித்த அவர் அங்கே வேலை பார்க்கும் தனது ஊழியர்களை சோபாவில் அமர வைத்திருப்பதாகவும், தன்னை அரசியல் நாகரீகம் தெரியாதவர் என விமர்சித்தவர்களுக்கு, தனக்கு அரசியல் நாகரீகமும் தெரியும், தளபதியின் ஆட்சியில் சிறப்பாக பணியாற்றவும் தெரியும் என்று தெரிவித்திருக்கிறார்.
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் தனது வெற்றியை மக்களுக்கான வெற்றியாகக் கருதுவதாக தெரிவித்திருந்தார். வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அப்போதுஅவர், “இந்த வெற்றி என்னுடையது அல்ல, மக்களின் வெற்றி. எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார். மேலும், “நான் தளபதிக்கான மறைமுகமாக நின்றேன். மக்கள் காட்டிய அன்பு விஜய் அவர்களுக்கான ஆதரவாகவே இருக்கிறது,” என்று கூறினார்.
அமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “எனக்கு பதவி பற்றிய விருப்பம் இல்லை. மக்களுக்கு சேவை செய்வதே என் முதன்மை. இப்போதே மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்,” என பதிலளித்தார்.
அத்துடன், தொகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், “பெண்கள் என்னை எளிதில் அணுகி தங்களது குறைகளை தெரிவிக்கலாம். அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்,” என்று உறுதியளித்தார்.
தவெக ஆட்சியமைத்த பெறகு, கனிமொழி தனது தொகுதியில் இருக்கும் நிறை-குறைகள் என்ன என்று கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் வழிகளை செய்து வருகிறார். மேலும், தன்னுடைய தொகுதியில் இருந்த அரசு பொது மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த அவர், அங்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை கேட்டறிந்து அதற்கு தீர்வு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
தவெக சார்பில் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் அருண்குமாரை 42,140 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தான் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர் என்றும், ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்றதால் “டாக்டர்” என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடம் குறித்து பேசிய கருத்துகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை சந்தித்தபோது ஏற்பட்ட “சோபா சர்ச்சை” காரணமாக விமர்சனங்களுக்கு உள்ளானார்.
அது தனது ஜோதிட அலுவலகம் என்றும், அதிகாரிகளை லெதர் சேரில்தான் அமர வைத்ததாகவும் விளக்கம் அளித்தார்.