)
உயரிய இடத்தில் இருந்து கொண்டு, யார் எளிமையான குணாதிசயத்துடன் இருதாலும், அவர்களை கவனிக்க இந்த உலகம் தவறுவதில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார், கோவை நீதிபதி பி.கே.சிவகுமார்.
கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் 5வது கூடுதல் மாவட்ட நீதிபதியான பி.கே.சிவகுமார், நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் போது அவருடைய வருகையை பாதுகாப்பாளர்களோ, அரசு ஒதுக்கிய வாகனங்களோ அறிவிக்காது. மாறாக, அவருடைய சைக்கிளின் பெல் சவுண்ட் மட்டுமே அறிவிக்கும். தன்னுடைய வீட்டிலிருந்து, திருச்சி சாலை வழியாக நீதிமன்ற வளாகத்திற்கு தினமும் மிதிவண்டியிலேயே பயணித்து வருகிறார், சிவகுமார். இவரை பேட்டி எடுக்க செய்தியாளர்கள் கேட்டபோதும், அதற்கு மறுத்த இவர், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் மூலம் வைரலானர்.
சில தினங்களுக்கு முன்னர், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினர். இதையடுத்து ஒரு கொலை வழக்கு உட்பட, எட்டு வழக்குக்ளில் சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்படவர்களின் ஆஜருக்காக ஏற்பட்ட செலவுகளுக்காக, சுமார் 62,000 ரூபாய்க்கும் மேல் அபராதம் செலுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார். இது, மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நீதிபதி, வெளியூருக்கு அதிகாரப்பூர்வ பயணங்களை, தனது வேலை நிமித்தமாக மேற்கொள்ளும் போதும், எப்போதாவதுதான் அரசு வாகனத்தை பயன்படுத்துவாராம். அதற்கு பதிலாக பஸ் அல்லது ரயிலில் பயணிப்பதை இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், தன் அறையில் இருக்கும் போது கூட அனைவரும் செருப்பு அணிந்துக்கொண்டுதான் இருக்க வேண்டும் என இவர் கூறுவதாகவும், அனைவருக்கும் கொடுக்கும் அதே மரியாதையைத்தான் இவர் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற வாயிலில் நிற்பவர்களுக்கு கொடுப்பதாகவும், அவர்கள் தங்களிடம் வரும் போது கூட நாற்காலியில் அமர வைத்துதான் பேசுவார் என்றும் அவருடன் இருப்பவர்கள் கூறுகின்றனர்.
இவருடன் இருக்கும் நீதிபதி அமர்வு எழுத்தர் இவர் குறித்து பேசுகையில், தனக்கென்று தனியறை இருந்தாலும், நீதிபதி எப்போதும் பொதுவாக அனைவரும் அமர்ந்து சாப்பிடும் பொது அறையில் அமர்ந்துதான் உணவு அருந்துவார் என்றும், அவர் கொண்டு வரும் மதிய உணவினை எங்களுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறினார். மேலும், இது போன்ற நிகழ்வு நிதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்களுக்கு பலமுறை ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் இருப்பதாகவும், அவர் நீதிமன்றத்தில் இருக்கும் போது ஒரு நீதிபதியாக தன்னுடைய கடமையில் உண்மையாக இருந்தாலும், மதிய உணவு வேளையிலோ, அலுவலகத்திற்கு செல்லும் போதோ நண்பரை போல நடந்து கொள்வார் என்றும் கூறினார்.
நீதிபதி சிவகுமாரின் இந்த எளிமை அனைவரையும் கவர்ந்திருக்கிறது. நீதிமன்ற வளாகத்திற்குள் எப்போதும் தனியாக நடந்து செல்லும் குணம் கொண்டவராக இருக்கும் இவர், தனக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து சேவகர்கள் யாரும் வருவதை ஒரு போதும் விரும்பியதே கிடையாதாம். ஒரு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து கொண்டு, எதார்த்தமான செயல்பாடுகளை செய்யும் இவரைப்போல, அரசு பொறுப்பில் இருக்கும் மக்களுடன் பிறரும் எளிமையாக பழக வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது.
நாமக்கல்லை சொந்த ஊராகக் கொண்ட இவர் சேலம், கோவை, மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் பணியாற்றி இருக்கிறார். எளிமையும் நேர்மையும் கொண்ட பி.கே. சிவகுமார் கீழ் கோர்ட்டுகளில் நீதிபதியாக இருந்தபோதே நீதிமன்றங்களுக்கு சைக்கிளில் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.