)
குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில், இன்று, வியாழக்கிழமை, 242 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா ட்ரீம்லைனர், AI-171, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவல்களின்படி, விமானம் நகரின் மேகனி நகர் பகுதிக்கு அருகே விழுந்து நொறுங்கியது. போயிங் 787 விமானம் இந்திய நேரப்படி பிற்பகல் 1:39 மணிக்கு ரன்வே 23-ல் இருந்து புறப்பட்டதை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதிப்படுத்தியது. மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு MAYDAY அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ATC) கூடுதல் அழைப்புகளுக்கு விமானத்திலிருந்து பதில் கிடைக்கவில்லை.
விமான நிலைய சுற்றளவுக்கு வெளியே விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில், அந்த இடத்திலிருந்து அடர்த்தியான கரும் புகை எழுவதைக் காண முடிந்தது. விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் ஆகியோர் வழிநடத்தினர். விமானத்தில் இருந்த மொத்த விமானிகளில் 2 விமானிகள், 10 கேபின் குழுவினர் மற்றும் லண்டன் கேட்விக் செல்லும் வழியில் இருந்த பயணிகள் அடர்ந்திருந்தனர்.
மீட்புக் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடி வரும் நிலையில், விமான விபத்திற்கு முன் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன என்பது குறித்து யாரும் அறியாத நிலையில், அதனை அறிய விமானத்தின் கருப்புப் பெட்டி தான் உதவும்.
கருப்புப் பெட்டி என்றால் என்ன?
அதன் பெயருக்கு மாறாக, கருப்புப் பெட்டி என்பது உண்மையில் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இது, கடுமையான தாக்கம் மற்றும் தீ எதுவும் பாதிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டது. கடுமையான அழுத்தம் மோதலைத் தாங்கும் சாதனமாகும். ஒவ்வொரு வணிக விமானத்திலும் இதுபோன்ற இரண்டு ரெக்கார்டர்கள் இருக்கும்:
விமானத் தரவு ரெக்கார்டர் (FDR) உயரம், வேகம், இயந்திர உந்துதல் மற்றும் விமானப் பாதை போன்ற தொழில்நுட்பத் தரவைப் பதிவு செய்கிறது.
காக்பிட் குரல் ரெக்கார்டர் (CVR) விமானி உரையாடல்கள், ரேடியோ பரிமாற்றங்கள், எச்சரிக்கை அலாரங்கள் மற்றும் சுற்றுப்புற இயந்திர ஒலிகள் உள்ளிட்ட காக்பிட் ஆடியோவைப் படம்பிடிக்கிறது.
இந்த ரெக்கார்டர்கள் வலுவூட்டப்பட்ட உறைகளில் வைக்கப்பட்டிருக்கும். மேலும் வெடிப்புகள், தீ, நீர் அழுத்தம் மற்றும் அதிவேக விபத்துகளைத் தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
விபத்திற்குப் பிறகு கருப்பு பெட்டியை கண்டறிவது ஏன் முக்கியமானது?
விபத்துக்கு முன்பு விமானி அறைக்குள் மற்றும் விமான அமைப்புகள் முழுவதும் என்ன நடந்தது என்பதை அறிய உதவும் முக்கிய தகவல்களை கருப்புப் பெட்டி வழங்குகிறது. அகமதாபாத் வழக்கில், என்ன நடந்தது என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும். இயந்திர செயலிழப்பு, பறவை தாக்குதல் அல்லது நடுவானில் தடை, விமானத்தில் தீ அல்லது வெடிப்பு, மனிதப் பிழை, விமானிகள் மேடே அழைப்பை வெளியிட்டார்களா, அல்லது ஏதேனும் தானியங்கி எச்சரிக்கைகளைப் பெற்றார்களா போன்ற பல தகவல்களை அறிந்து கொள்ள உதவும்.
பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டவுடன் என்ன நடக்கும்?
தற்போது, அகமதாபாத் விபத்து நடந்த இடத்திலிருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், பயணிகளை மீட்கும் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் முடிந்த உடன், தேடுதல் குழுக்கள் பிளாக் பாக்ஸ் தேடும் பணியை மேற்கொள்வார்கள். கண்டுபிடிக்கப்பட்டவுடன், சாதனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அல்லது விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) கீழ் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
நிபுணர்கள், பிளாக் பாக்ஸில் உள்ள நினைவக தொகுதிகளைப் பிரித்தெடுத்து டிகோட் செய்வார்கள்.
குரல் மற்றும் பிற தகவல்களை ரேடார் பதிவுகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பதிவுகளுடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்வார்கள். பிளாக் பாக்ஸ் என்னும் கருப்பு பெட்டிக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் சம்பவத்தின் சிக்கலான தன்மையைப் பொறுத்து, செயல்முறை பல நாட்கள் முதல் சில வாரங்கள் வரை ஆகலாம்.
கடந்த கால விபத்துக்களுக்கான காரணங்களை அறிய உதவிய கருப்பு பெட்டி
உலகளவில், 2015ம் ஆண்டில் ஜெர்மன்விங்ஸ் விபத்து முதல் மலேசியா ஏர்லைன்ஸ் சம்பவங்கள் வரை பெரிய விமானப் பேரழிவுகள் குறித்த விசாரணையில் கருப்புப் பெட்டி அளித்த தரவு மிக முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இந்தியாவில், 2020 கோழிக்கோடு விபத்து விசாரணையில், தரையிறங்கும் போது ஓடுபாதை நிலை மற்றும் விமானியின் முடிவு ஆகியவை தொடர்பாக முக்கிய தகவல் கிடைத்தன. பல சந்தர்ப்பங்களில், என்ன நடந்தது என்பதற்கான ஒரே உறுதியான கணக்கை கருப்புப் பெட்டி வழங்குகிறது, குறிப்பாக உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லாதபோது அல்லது விபத்துக்கான சான்றுகள் எதுவும் கிடைக்காத போது, கருப்பு பெட்டி மிக முக்கிய தகவல்களை வழங்கும்.
விபத்து நடந்த இடத்திலிருந்து வரும் காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் கொடுக்கும் தகவல்கள் மூலம் சில துப்புகள் கிடைக்கக்கூடும் என்றாலும், இறுதியில் தெளிவான பதில்களைக் கொடுப்பது கருப்புப் பெட்டிதான். வரும் நாட்களில், இந்த கருப்பு பெட்டியை மீட்டெடுப்பதும் பகுப்பாய்வு செய்வதும் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மிகக் கடுமையான விமானப் விபத்துக்களில் ஒன்றான அகமதாபாத் விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ