)
நாட்டு மக்கள் அனைவரின் மனதையும் உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் தங்களது உயிரை பறி கொடுத்தனர். நேற்று மதியம் குஜராத்தின் அஹமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் ஏற்பட்ட கோர விபத்தில், பலரது கனவுகளும் ஆசைகளும் சிதைந்து போனது. எனினும் இதில் அதிர்ஷ்டவசமாக, 11A இருக்கையில் அமர்ந்திருந்த, விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்றவர் தப்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதைப்போலவே, பூமிகா சவுஹான் என்ற பெண்ணும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளார். இதற்குக் காரணம் அவர் விமானத்தை தவறவிட்டது தான்.
பொதுவாக விமானத்தை தவற விட்டால், நமது பயண திட்டம் பாதிக்கப்பட்டு விட்டதே என் கவலைப் படுவோம். ஆனால், இதனை தவற விட்டது, பூமிகா சவுஹானிற்கு மறுபிறவியை அளித்துள்ளது. ஏர் இந்தியா AI 171 விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த பூமிகா சவுகான் என்ற நபர், பத்து நிமிட தாமதத்தால் லண்டன் விமானத்தை தவற விட்டுள்ளார். அகமதாபாத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதன் காரணமாக, குறித்த நேரத்தில் விமான நிலையம் அடைய முடியாமல் போனதால் அவர் விமானத்தை தவற விட்டுள்ளார்.
விமான விபத்து குறித்து தெரிவித்த அவர், இதை நினைத்து தனது உடல் தற்போதும் நடுங்குவதாகவும், தன்னை அந்த விநாயகர் தான் காப்பாற்றினார் எனவும் கூறினார். விமானத்தில் ஏற சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திற்கு தான் மதியம் ஒன்றரை மணிக்கு வந்து சேர்ந்ததாகவும், விமானம் 1:38க்கு விழுந்து நொறுங்கியதையும் (Ahmedabad Plane Crash) குறிப்பிட்ட அவர், இதை கேட்டதும் தான் அதிர்ச்சியில் உறைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.லண்டனில் வசிக்கும் பூமிகா சவுஹான், விடுமுறையை கழிப்பதற்காக இந்தியா வந்திருந்தார்.
விமான விபத்தில் இறந்த விமான பயணிகளின், பயண பின்னணிகள் நமது கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. இதில் தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன் பயணித்த பிரதிக் ஜோஷி என்ற மருத்துவர், பலவித கனவுகளுடன் லண்டன் பயணத்தை தொடங்கும் போது, அவர் எடுத்துக் கொண்ட செல்பி மிகவும் வைரலானது. அந்த புகைப்படம் பகிரப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் கோர விபத்தில், விழுந்து நொறுங்கியதில் அவர்களது கனவுகளும் புதைந்து போனது.
வியாழக்கிழமை பிற்பகல் விபத்து, போயிங் நிறுவனத்தின் 787 ட்ரீம்லைனர் விமானம் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இது அமெரிக்க விமானத் தயாரிப்பாளரின் மிகவும் மேம்பட்ட விமானமாகும். 12 ஆண்டுகள் பழமையான இந்த விமானம் விபத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து பறந்து வந்தது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அது வேகமாகக் கீழே இறங்கி, ஒரு குடியிருப்புப் பகுதியில் மோதிய பின்னர் ஒரு பெரிய தீப்பந்தமாக வெடித்தது. விமானம் தரையில் விழுவதற்கு முன்பு 625 அடி உயரத்தை அடைந்ததாக Flightradar24 தரவுகள் தெரிவிக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ