அம்பேத்கரை அவமதித்தாரா அமித் ஷா? பதவி விலக கோரிக்கை... அப்படி என்ன பேசினார் அவர்...?
Amit Shah Ambedkar Row: அம்பேத்கரை மாநிலளங்களவை உரையின்போது மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்து பேசியதாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடியும் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
Amit Shah Ambedkar Row Latest News Updates: அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகளானதை ஒட்டி மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அம்பேத்கர் பெயரை பொதுவெளியில் பயன்படுத்துவது இப்போதெல்லாம் ஒரு பேஷனாக மாறிவிட்டது என்றார்.
அமித் ஷாவின் இந்த பேச்சு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை கிளிப்பியிருக்கிறது. அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி, அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
அமித் ஷா பேசியது என்ன?
மாநிலங்களவையில் அமித் நேற்று பேசியபோது,"அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. அவர்கள் அத்தனை முறை கடவுளின் பெயரைச் சொல்லியிருந்தால் கூட சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும். அவரது பெயரை இன்னும் 100 முறை கூட அதிகமாக சொல்லுங்கள். ஆனால் அவரை பற்றிய உங்களின் எண்ணம் என்ன என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்." என்றார்.
மேலும், "ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் வெளியேறியதற்கு முக்கிய காரணம், அந்த ஆட்சியின் மீது அவருக்கு இருந்த அதிருப்திதான். பட்டியல் சமூக மக்கள் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் மீதான அப்போதைய அரசின் அணுகுமுறை அம்பேத்கருக்கு அப்போது பிடிக்கவில்லை. குறிப்பாக, அப்போதைய அப்போதைய அரசின் கொள்கைகள் மற்றும் சட்டப்பிரிவு 370 மீதான அரசின் நிலைப்பாடு ஆகியவற்றில் அம்பேத்கருக்கு வருத்தமே இருந்துள்ளது. அமைச்சரவைக்கு வர அவருக்கு வாக்குறுதி ஒன்று அளிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றாத காரணத்தால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்" என அமித் ஷா பேசினார்.
மேலும் படிக்க | One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 வாக்குகள்!
'கடவுளுக்கு நிகரானவர் அம்பேத்கர்'
அமித் ஷாவின் இந்த பேச்சை குறிவைத்துதான் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து கூறுகையில்,"மனு சாஸ்திரத்தை பின்பற்றுவர்களுக்கு இயல்பாகவே அம்பேத்கர் பிரச்னை அளிப்பவராகவே இருப்பார்" என்றார். மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில்,"அமித் ஷா அம்பேத்கரை அவமதித்து பேசியதன் மூலம் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை மூவர்ணத்திற்கும், அசோகா சக்கரத்திற்கும் எதிரான மனநிலையை வைத்திருக்கிறது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.
என்னை போன்ற கோடிக்கணக்கானவர்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் கடவுளுக்கும் நிகரானவர் என்பதை மோடி தலைமையிலான அமைச்சர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அம்போத்கர் இந்தியாவின் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளுக்கு ஒரு மீட்பர் ஆவார்" என சீறினார். மேலும், காங்கிரஸ் இந்த விவகாரத்தை இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கச் செய்தது.
காங்கிரஸ் கட்சியை சாடிய பிரதமர் மோடி
இந்நிலையில், இந்த விவாகரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,"காங்கிரஸ் கட்சியும், அதன் அழுகிய சுற்றமும் தங்களின் தீங்கிழைக்கும் பொய்களால் பல வருடங்களாக அவர்கள் செய்துவந்த தவறுகளை, குறிப்பாக அம்பேத்கரை அவமதித்ததை மறைக்க முடியும் என்று நினைத்தால், அவர்கள் போடுவது தப்பு கணக்கு ஆகும். டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், எஸ்சி/எஸ்டி சமூகங்களை அவமானப்படுத்தவும், ஒற்றை குடும்பத்தின் தலைமையில் ஒரு கட்சி எப்படி எல்லாவிதமான கேடுகெட்ட தந்திரங்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள்.
அவரை ஒரு முறை அல்ல, இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது காங்கிரஸ். நேரு அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரது தோல்வியை கௌரவப் பிரச்சினையாக ஆக்கினார். காங்கிரஸ் அவருக்கு பாரத ரத்னா மறுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு இடமளிக்க மறுத்தது. காங்கிரஸ் அவர்கள் விரும்பியபடி எதை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். ஆனால் அவர்களின் ஆட்சியில் எஸ்சி/எஸ்டி சமூகங்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் நடந்துள்ளன என்பதை அவர்களால் மறுக்க முடியாது. பல ஆண்டுகளாக, அவர்கள் ஆட்சியில் அமர்ந்திருந்தாலும், எஸ்/எஸ்டி சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க எந்த ஒரு முன்னெடுப்பையும் செய்யவில்லை" என அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினார்.
'எதிர்க்கட்சிகளின் கபடநாடகம்'
தொடர்ந்து பிரதமர் மோடி அவரது பதிவில்,"டாக்டர் அம்பேத்கரை அவமதித்த மற்றும் எஸ்/எஸ்டி சமூகங்களைப் புறக்கணித்த காங்கிரஸின் இருண்ட வரலாற்றை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அம்பலப்படுத்தினார். அவர் முன்வைத்த உண்மைகளால் அவர்கள் திகைத்துவிட்டார்கள், அதனால்தான் அவர்கள் இதுபோன்ற கபட நாடகத்தில் ஈடுபடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்களுக்கும், மக்களுக்கும் உண்மை தெரியும்!
நாம் இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதற்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரே காரணம். கடந்த பத்தாண்டுகளாக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற அரசு அயராது உழைத்துள்ளது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து அகற்றுவது, எஸ்சி/எஸ்டி சட்டத்தை வலுப்படுத்துவது, தூய்மை இந்தியா, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், உஜ்வாலா யோஜனா போன்ற நமது அரசின் முதன்மைத் திட்டங்களான எந்தத் துறையாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மாற்றியவை.
மேலும் படிக்க | 5 Rupees Coin | 5 ரூபாய் நாணயத்தை தடை செய்கிறதா ரிசர்வ் வங்கி.. உண்மை என்ன தெரியுமா?
டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய ஐந்து முக்கிய இடங்களான பஞ்சதீர்த்தத்தை மேம்படுத்த அரசு பாடுபட்டுள்ளது. பல தசாப்தங்களாக சைத்ய பூமிக்கான நிலம் தொடர்பான பிரச்சினை நிலுவையில் உள்ளது. எங்கள் அரசாங்கம் பிரச்சினையைத் தீர்த்தது மட்டுமல்ல, நான் அங்கு பிரார்த்தனை செய்யவும் சென்றேன். டாக்டர் அம்பேத்கர் தனது கடைசி ஆண்டுகளை கழித்த டெல்லியில் உள்ள 26, அலிபூர் சாலையையும் நாங்கள் கையகப்படுத்தி உள்ளோம். லண்டனில் அவர் வசித்த வீடும் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரைப் பொறுத்தவரை, எங்களது மரியாதை என்பது முழுமையானது" என பதிவிட்டுள்ளார்.
ராகுல், கார்கே உடன் பிரதமர் சந்திப்பு?
இது ஒருபுறம் இருக்க, மனித உரிமை ஆணையத்தின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை தலைவர் ஓம் பிர்லா ஆகியோரும் இந்த தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க | பெண்களுக்கு LICயில் வேலை வாய்ப்பு... மாதம் ரூ.7000 உதவித்தொகையுடன் பயிற்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ