உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக பேசிய பாஜக எம்.பி.க்கள் - சர்ச்சையும்... கண்டனங்களும்...

National News: உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும், தலைமை நீதிபதிக்கு எதிராகவும் பாஜக எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2025, 12:29 PM IST
  • நிஷிகாந்த் தூபே, தினேஷ் சர்மாவின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
  • வக்பு வாரிய சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
  • பாஜக இந்த கருத்துக்களை முற்றிலுமாக நிராகரிக்கிறது - ஜே.பி. நட்டா
உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக பேசிய பாஜக எம்.பி.க்கள் - சர்ச்சையும்... கண்டனங்களும்...

National News In Tamil: மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஷிகாந்த் தூபே மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றம் குறித்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

National News: வக்பு வாரிய திருத்தச் சட்டமும், உச்ச நீதிமன்றமும்...

சமீபத்தில், வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு எதிரான வழக்கு மீதான விசாரணையில், அச்சட்டத்தின் சில விதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் தனது கவலைகளை எழுப்பியது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 5ஆம் தேதி அன்று திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், அதுவரை சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளை செயல்படுத்தாமல் தவிர்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

National News: பாஜகவின் எம்பிக்களின் சர்ச்சை கருத்துகள்

இதற்கு, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஷிகாந்த் தூபே மற்றும் தினேஷ் சர்மா உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா தொகுதியின் மக்களவை உறுப்பினரான நிஷிகாந்த் தூபே அவரது X தளத்திலும், ஊடகங்களுக்கு அளித்த கருத்துக்களிலும் இந்த கருத்துகளை தெரிவித்திருந்தார். 

அதில் அவர்,"சட்டங்களை உச்ச நீதிமன்றம் இயற்ற வேண்டும் என்றால் நாடாளுமன்றம் முற்றிலும் கலைக்கப்படலாம்" என கருத்து தெரிவித்திருந்தார். மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாதான், நாட்டில் நடக்கும் 'உள்நாட்டு போருக்கு' பொறுப்பு என பேசியிருந்தார். 

மாநிலங்களவை உறுப்பினரும், உத்தர பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வருமான தினேஷ் சர்மாவும் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் பேசியதாவது, "அரசியலமைப்புச் சட்டத்தின் படி, மக்களவை மற்றும் மாநிலங்களவையை யாரும் இயக்க முடியாது. மேலும், குடியரசு தலைவர் ஏற்கனவே அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவரின் முடிவை யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது, ஏனெனில் குடியரசு தலைவரே உச்சம்" என்றார். இந்த இரண்டு எம்.பி.,க்களின் பேச்சுக்களும் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளன. 

National News: எதிர்க்கட்சிகள் கண்டனம்

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்த இரண்டு எம்.பி.,க்களின் கருத்துக்களுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,"அரசியலமைப்புச் சட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள். ஒரு சட்டம் இயற்றப்படும்போது, ​​அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிராக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. 

கொண்டுவரப்பட்ட சட்டம் அரசியலமைப்பிற்கு எதிராக இருந்தால், அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தேர்தல் பத்திரங்கள் போன்ற பல விஷயங்களில், அரசாங்கத்தால் செய்யப்பட்டவை அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதால், உச்ச நீதிமன்றம் தற்போது குறிவைக்கப்படுகிறது" என்றார்.

National News: கருத்துக்களை ஏற்காத பாஜக

ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக தேசிய தலைமை எம்.பி.க்களின் கருத்தை ஏற்கவில்லை. இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவரது X பக்கத்தில்,"பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் நீதித்துறை மற்றும் நாட்டின் தலைமை நீதிபதி குறித்து தெரிவித்த கருத்துகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை. 

இவை அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் ஆகும். ஆனால் பாஜக இத்தகைய கருத்துக்களுடன் உடன்படவில்லை அல்லது இத்தகைய கருத்துக்களை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. பாஜக இந்த கருத்துக்களை முற்றிலுமாக நிராகரிக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி எப்போதும் நீதித்துறையை மதித்து அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளது, ஏனெனில் உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நமது ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் அரசியலமைப்பு பாதுகாப்பின் வலுவான தூண் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
அவர்கள் இருவர் உட்பட மற்ற அனைவருக்கும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

National News: ஜெகதீப் தன்கரின் காட்டமான பேச்சு

துணை குடியரசுத் தலைவரான ஜெகதீப் தன்கர் உள்பட மூத்த தலைவர்கள் பலரும் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து தெரிவித்த கருத்துகளை தொடர்ந்து பாஜகவின் எம்.பி.க்களின் இந்த கருத்துகளும் வந்துள்ளது எனலாம். வக்பு வாரிய திருத்தச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை குறிப்பிட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இது ஒரு கவலைக்குரிய முன்னேற்றம் என்றார். மேலும், சட்டமியற்றுபவர்களாகவும், நிர்வாகக் குழுவாகவும், "சூப்பர் பார்லிமென்டாகவும் நீதிபதிகள் செயல்படும் ஒரு ஜனநாயகம் இந்தியாவிற்கு ஒருபோதும் பொருந்தாது என்றும் காட்டமாக பேசியிருந்தார். 

மேலும், இந்திய தலைமை நீதிபதி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் மூலம், பதவியில் இருக்கும் ஒரு நீதிபதிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வதற்கு, நீண்ட அரசியலமைப்பு செயல்முறை தேவைப்படுகிறது. இதுகுறித்தும் ஜெக்தீப் தன்கர் கேள்வி எழுப்பினார். அவரைப் போன்ற ஒரு அரசியலமைப்புச் செயல்பாட்டாளர் கூட எஃப்.ஐ.ஆர்-இல் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்று ஜெகதீப் தங்கர் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அடுத்த தலைமை நீதிபதி இவர் தான்! யார் இந்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய்

மேலும் படிக்க | வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்... சுங்கச்சாவடிகளுக்கு குட்பை.. வருகிறது புதிய முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News