)
கொரோனா காலத்தில் பலரும் தங்களது வேலைகளை இழந்து மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் ஊரடங்கால் தெருவோர வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, அவர்களை மீண்டும் தொழில் செய்ய வைக்கும் உயரிய நோக்குடன், மத்திய அரசு "பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி" (PM SVANidhi) என்ற சிறப்பு நுண்கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஜூன் 1, 2020 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம், இலட்சக்கணக்கான சிறு வணிகர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது.
திட்டத்தின் முக்கிய நோக்கம்
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், தெருவோர வியாபாரிகளுக்கு எளிதான முறையில், எந்தவிதமான பிணையமும் இல்லாமல், குறைந்த வட்டியில் மூலதனக் கடனை வழங்குவதாகும். இதன் மூலம் அவர்கள் கந்துவட்டி போன்ற முறைசாரா கடன்களில் சிக்குவதை தவிர்க்கலாம். இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக கடன் வழங்கப்படுகிறது. முதல் தவணையாக ரூ. 10,000, இரண்டாவது தவணையாக ரூ.20,000 (முதல் கடனை வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய பிறகு), மூன்றாவது தவணையாக ரூ.50,000 (இரண்டாவது கடனை வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய பிறகு) வழங்கப்படுகிறது.
வட்டி மானியம்
வாங்கிய கடனை சரியான நேரத்தில் அல்லது முன்கூட்டியே திருப்பி செலுத்தும் வியாபாரிகளுக்கு, ஆண்டுக்கு 7% வட்டி மானியம் வழங்கப்படும். இந்த மானிய தொகை, காலாண்டு அடிப்படையில் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். டிஜிட்டல் முறையில் (UPI, QR Code) பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு, மாதம் ரூ.100 வரை கேஷ்பேக் வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 வரை ஊக்கத்தொகை பெறலாம். பெறப்பட்ட கடனை, ஒரு வருட காலத்திற்குள் மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு எந்தவித அபராதமும் கிடையாது.
யாரெல்லாம் தகுதியானவர்கள்?
நகர்ப்புறம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் தொழில் செய்யும் அனைத்துத் தெருவோர வியாபாரிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் (Urban Local Bodies - ULBs) வழங்கப்பட்ட விற்பனை சான்றிதழ் அல்லது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அப்படி சான்றிதழ் இல்லாதவர்கள், நகராட்சி அலுவலகம் அல்லது நகர விற்பனைக் குழுவிடம் இருந்து ஒரு பரிந்துரைக் கடிதத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் பயன் பெற ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ்புக் மற்றும் விற்பனை சான்றிதழ் அல்லது பரிந்துரைக் கடிதம் இருந்தால் போதும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்திற்கு இரண்டு வழிகளில் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
- ஆன்லைன் முறை: pmsvanidhi.mohua.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்த்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
- ஆப்லைன் முறை: அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி, அவர்களின் உதவியுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இந்த PM SVANidhi திட்டம், முறைசாரா பொருளாதாரத்தில் இருக்கும் சிறு வணிகர்களை, முறையான கடன் அமைப்புக்குள் கொண்டு வந்து, அவர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்து, நிதி ரீதியாக அவர்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ