கொரோனா வைரஸ் பாதிப்பு... 8,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் பெரும்பாலான நகரங்கள் முடங்கி உள்ளதால், சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

Last Updated : Feb 6, 2020, 10:06 AM IST
கொரோனா வைரஸ் பாதிப்பு... 8,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு!! title=

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் பெரும்பாலான நகரங்கள் முடங்கி உள்ளதால், சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.  வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது. 

கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 65 பேர் உயிர் இழந்துள்ளனர். புதிதாக, 3,887 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை, 24 ஆயிரத்து, 324 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 3,219 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர். நாட்டில் உள்ள, 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது. 

சீனாவுக்கு சென்று திரும்பியவர்கள் மூலமே, இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், கேரளாவைச் சேர்ந்த, சீனாவின் வூஹானில் மருத்துவம் படித்து வரும் மூன்று மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2003 ஆம் ஆண்டில், சீனாவில் இருந்து உருவான சார்ஸ் வைரஸ் பாதிப்பால், சீனாவில் மட்டும், 349 பேர் பலியாகினர்.

வைரஸ் வேகமாக பரவி வருவதால், வூஹான் உள்ளிட்ட நகரங்களில் படிக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை அழைத்துச் செல்ல, இந்தியா உட்பட பல
நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. 

சீனாவில் இருந்து பரவிவரும் வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, அனைத்து நாடுகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, உலக வங்கி கூறியுள்ளது. மேலும்  சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படுமா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என, உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த, வைர வியாபாரிகளுக்கு மிகவும் முக்கியமான வியாபார மையமாக, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் விளங்குகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்த வைர வியாபாரம் முடங்கியுள்ளது. இது, நாட்டின் மொத்த வைர ஏற்றுமதியில், 37 சதவீதமாகும். வைரஸ் பாதிப்பால், அடுத்த ஒரு மாதத்துக்கு, கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஹாங்காங் அறிவித்துள்ளது. மேலும், ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடப்பதாக இருந்த சர்வதேச நகைக் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 8,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு இருக்கும்' என, சூரத் வைர வியாபாரிகள் கூறியுள்ளனர். 

Trending News