)
Covid 19 Vaccine Not Linked With Sudden Deaths : இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே, திடீர் மாரடைப்பு அல்லது நெஞ்சு வலி ஏற்பட்டு சிலர் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது. இந்த திடீர் மரணங்கள் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளதோடு, இதற்கு கோவிட் தடுப்பூசிகள்தான் காரணம் என்ற சந்தேகமும் எழுந்தது.
தமிழ்நாட்டில் மக்கள் இப்படி கோவிட் தடுப்பூசிதான் மாரடைப்புக்கு காரணம் என யோசிக்க, நடிகர் விவேக் மரணம் ஒரு பெரும் காரணமாக இருந்தது. கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில நாட்களிலேயே அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எனவே அவர் இறந்ததற்கு கொரோனா தடுப்பூசிகள்தான் காரணம் என்று ஒரு தரப்பினர் கிளப்பி விட்டனர். அதையே இப்போது வரை பலர் நம்பி வருகின்றனர்.
இளம் வயதினரும் மரணம்..
சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே இருதய நோய் பிரச்சனை இருந்தது என்பது ஒரு காரணம் என்றாலும், இவ்வளவு சிறிய வயதில் எப்படி மாரடைப்பு ஏற்படும் என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்தது. அதற்கு முன்பு, எட்டு வயது சிறுமி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் போட்டு உயிரிழந்தார். இது போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்ததால், மக்களிடையே இது பெரும் பயத்தை உண்டாக்கியது.
கர்நாடக முதலமைச்சர் பரிந்துரை..
சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவின் முதலமைச்சர் சித்தராமையா, ஹாசன் மாவட்டத்தில் அடிக்கடி மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரிப்பதாக தெரிவித்திருந்தார். இது கோவிட் தடுப்பூசியின் தாக்கமாக இருக்கலாம் என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா காலகட்டத்தில் அவசர அவசரமாக அனைவருக்கும் செலுத்தப்பட்ட தடுப்பூசி இது போன்ற திடீர் மரணங்களுக்கு வழிவகுத்து இருக்கலாம் என அவர் கூறியிருந்தார். மேலும், நெஞ்சு வலி பிரச்சனை இருப்பவர்கள் அருகில் இருக்கும் மருத்துவ மையங்களுக்கு சென்று தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சித்ராமையாவின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக சுகாதார அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இதில் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் எதிர்பாராத மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பல சுகாதார நிறுவனங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.
ICMR மற்றும் AIIMS நடத்திய ஆய்வுகளில் விவரிக்க முடியாத திடீர் மரணங்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாக காட்டுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?
இளம் வயதினர், குறிப்பாக 18-45 வயதில் இருப்பவர்கள் திடீரென்று மரணம் அடைவது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மரணங்களுக்கு பின்னால் உள்ள காரணங்களை புரிந்து கொள்ள இரண்டு முக்கிய ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
முதல் ஆய்வு:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தேசிய தொற்று நோய் நிறுவனம் மூலம்,
19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 முக்கிய மருத்துவமனைகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டது. மே 2023-ல் இருந்து, ஆகஸ்ட் 2023 வரை நடந்த இந்த ஆய்வில் கோவிட்-19 தடுப்பூசிகள் இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களை ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.
இரண்டாம் ஆய்வு:
இரண்டாவது ஆய்வை புதுடெல்லியின் AIIMS மருத்துவமனை ICMR-ன் துணையுடன் நடத்தியது. இந்த ஆய்வானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இளம் வயதில் இருப்பவர்கள் திடீர் மரணம் அடைவது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வின் தொடக்க முடிவுகளில் மாரடைப்புதான் இதற்கு பெரும் காரணமாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டுகளின் தரவுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில், திடீர் மரணங்களுக்கான காரணங்களில் பெரிய மாற்றம் இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த ஆராய்ச்சி முடிவுகள், கோவிட் 19 தடுப்பூசி இந்த மரண அபாயத்துக்கு காரணம் இல்லை என்பதை இந்த ஆராய்ச்சி தெளிவாக காட்டுவதாகவும் குறிப்பிட்டிடுள்ளது. தற்போதுள்ள சுகாதார நிலைமைகள், மரபணு பிரச்சனை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு பெரும் பங்கை வகிப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.
எச்சரிக்கை:
கோவிட் 19 தடுப்பூசியை ஆதாரமின்றி திடீர் மரணங்களுடன் இணைப்பது, மக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. மக்கள், இனி தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்க இது வழிவகுக்கும் என்றும், தகுந்த ஆதாரமின்றி இது போன்ற செய்திகளை பரப்புவது தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ