)
Election Commission: தேர்தல் ஆணையமும், ஆளும் பாஜகவும் கைக்கோர்த்து நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், தேர்தலில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த வகையில், ராகுல் காந்திரயின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று மதியம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய வாக்காளர்களை குறிவைத்து தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து அரசியல் செய்யப்படும்போது, இன்று தேர்தல் ஆணையம் அனைவருக்கும் அதனை தெளிவுபடுத்த விரும்புகிறது.
ஏழைகள், பணக்காரர்கள், முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் உட்பட அனைத்து பிரிவுகள் மற்றும் அனைத்து மதங்களைச் சேர்ந்த அனைத்து வாக்காளர்களுடனும் தேர்தல் ஆணையம் பயமின்றி துணை நின்றது, தொடர்ந்து நிற்கும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில்தான் பதிவு செய்திருக்கின்றன. தேர்தல் ஆணையம் கட்சிகள் இடையே எவ்வாறு பாகுபாடு காட்ட இயலும்? தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அனைவரும் சமம். எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு கடமையில் இருந்து பின்வாங்காது" என்றார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய, "இதுகுறித்து ஒரு பிரமாணப் பத்திரம் சமர்பிக்க வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மூன்றாவது ஆப்ஷன் ஏதும் இல்லை. 7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் சமர்பிக்காவிட்டால் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தம்" என்றார். 'வாக்கு திருட்டு' போன்ற தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் கடுமையாக சாடியிருந்தார்.
மேலும் போலி வாக்காளர்கள், வாக்கு திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, "மக்களவை தேர்தலுக்காக 1 கோடிக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் மற்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் வேலை செய்கிறார்கள்.
இவ்வளவு வெளிப்படத்தன்மைக் கொண்ட செயல்முறையுடன் இவ்வளவு மக்கள் முன்னிலையில் யாராவது வாக்குகளைத் திருட முடியுமா? வாக்கு திருட்டு பற்றிய சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன, ஆனால் நாங்கள் ஆதாரம் கேட்டபோது, ஆதாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்தையோ அல்லது எந்த வாக்காளரையோ பயமுறுத்துவதில்லை" என பதில் அளித்தார்.
தற்போது பீகார் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பேசிய ஞானேஷ் குமார், இந்த நடைமுறை முழுவதும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருகிறது என்றும் வாக்காளர்கள், அரசியல் கட்சியினர், வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்பும் இதில் இருக்கிறது என விளக்கம் அளித்தார்.
மேலும், அவர் கூறுகையில், "அனைத்து தரப்பும் சேர்ந்துதான் இந்த தரவுகளை சரிபார்க்கின்றன, ஆவணங்களை கையெழுத்திடுகின்றன, வீடியோ வாக்குமூலங்களையும் அனைவருமே வழங்கின்றனர்" என்றார். மேலும் தேர்தல் ஆணையத்தின் கதவுகள் எப்போதும் அனைவருக்கும் திறந்தே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இயந்திரத்தால் படிக்கக்கூடிய டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் குறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர், அது வாக்காளரின் தனியுரிமையை மீறுவதற்கு வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றம் 2019ஆம் ஆண்டில் கூறியிருந்தது. சில நாட்களுக்கு முன்பு பல வாக்காளர்களின் புகைப்படங்கள் அவர்களின் அனுமதியின்றி ஊடகங்களில் வெளியிடப்பட்டதை பார்க்க முடிந்தது. தேர்தல் ஆணையமும் வாக்காளரின் சிசிடிவி காட்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ன?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், களத்தில் சரிபார்க்கப்படும் தரவுகள் ஏதும் கட்சித் தலைமையை அடைவதில்லை அல்லது அவை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு, பொய் தகவலுக்கு வழிவகுக்கின்றன என்றும் ஞானேஷ் குமார் பேசியிருந்தார். பீகாரில் 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் துணை நிற்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையின் மீதோ, வாக்காளர்களின் நம்பகத்தன்மையின் மீதோ எவ்வித கேள்வியும் இல்லை என்று ஞானேஷ் குமார் பேசியிருந்தார். தேர்தல் ஆணையம் நேற்றும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து 10 அம்சங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தது.
வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி பீகாரில் நடைபயணத்தை இன்று தொடங்கியிருக்கும் வேளையில், தலைமை தேர்தல் ஆணையர் இந்த விளக்கங்களை அளித்திருக்கிறார் எனலாம். பீகாரில் உள்ள சசாரம் என்ற நகரில் தொடங்கியிருக்கும் இந்த நடைபயணம் சுமார் 1,300 கி.மீ., தூரத்திற்கு நடைபெற இருக்கிறது.
வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்தியா கூட்டணியின் பிரச்சார நடைபயணமாக இந்த வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. பீகாரின் 20 மாவட்டங்களில் இந்த யாத்திரை நடைபெற இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் போர் என எதிர்க்கட்சிகள் இதை குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ