)
Election Commission Of India: வாக்காளர் பட்டியல்கள் என்பது மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் தயாரிக்கப்பட்டவை என்றும் அதை தயாரிக்க பல கட்ட பணிகள் இருக்கும் நிலையில், அனைத்து கட்டங்களிலும் அரசியல் கட்சிகள் அந்த பணியில் தொடர்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
முந்தைய தேர்தல்களின் வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருப்பதாக அரசியல் கட்சிகளும், தனிநபர்களும் குற்றஞ்சாட்டி கேள்வி எழுப்புவதை தேர்தல் ஆணையம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்காகவே, ஒவ்வொரு தேர்தல்களுக்கு முன்னரும் உரிமைகோரல் செய்யவும் மற்றும் ஆட்சேபனை செய்யவும் அவகாசம் கொடுக்கப்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில், தேர்தலுக்கு முன் குறிப்பிட்ட நேரத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டிருந்தால், அவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, புகார்கள் உண்மையானதாக இருந்தால் தேர்தலுக்கு முன்பே தேர்தல் பதிவு அதிகாரிகளால் (ERO) அவை சரி செய்யப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன என்றும் பல அரசியல் கட்சிகளும் அவற்றின் வாக்குச்சாவடி முகவர்களும் சரியான நேரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மதிப்பாய்வு செய்யத் தவறிவிட்டனர் அல்லது அதற்கான ஆட்சேபனைகளை எழுப்பவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட 10 அம்ச அறிக்கையில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான தேர்தல் செயல்முறை பல அடுக்குகளைக் கொண்ட, பரவலாக்கப்பட்ட அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, அதில் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் அளவிலான அதிகாரிகள் அதாவது, தேர்தல் பதிவு அதிகாரிகள் (EROs), வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் (BLOs) உதவியுடன் வாக்காளர் பட்டியலைத் தயாரித்து இறுதி செய்யும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் பதிவு அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள்தான் வாக்காளர் பட்டியலை இறுதிசெய்கின்றனர் என்றும் எனவே அதன் துல்லியத்தன்மைக்கு அவர்களே பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது. வரைவு பட்டியல்கள் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் காகித வடிவத்திலும் மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் பகிரப்படுகின்றன என்றும், பொதுமக்களின் அணுகலுக்காக தேர்தல் ஆணையம் வலைத்தளத்திலும் வெளியிடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, தேர்தல் ஆணையம் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியவர்களில் முக்கியமானவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலிலும், அதற்கு முன் நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் பல பகுதிகளில் வாக்களார் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சில ஆதாரங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். மக்களவை தேர்தலின்போது மத்திய பெங்களூரு தொகுதியில் உள்ள மகாதேவபுரா எனும் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்களை கண்டறிந்திருப்பதாக ராகுல் காந்தி சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார்.
போலி பெயர்கள், போலி முகவரிகள், போலியான தந்தை பெயர், ஒரு சிறிய குடியிருப்பில் 80 வாக்காளர்களின் பெயர்கள் இருப்பது என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து இந்த முறைகேடுகளை கண்டறியவே காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 6 மாதக்காலம் எடுத்ததாகவும், தேர்தல் ஆணையம் காகித முறையில் கொடுப்பதால் அவற்றை ஆய்வு செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். மேலும், தேர்தல் ஆணையம் ஏன் இந்த வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் முறையில் கட்சிகளுக்கு வழங்குவதில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ