)
Unified Pension System: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் பற்றிய முக்கிய செய்தியை வெளியிட்டார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மிகக் குறைந்த அளவிலான வரவேற்பே கிடைத்துள்ளது. இத்திட்டத்தில் 4 சதவீதத்தினர் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஜூலை 3 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, ஜூலை 19 நிலவரப்படி UPS-ஐத் தேர்ந்தெடுத்த அரசு ஊழியர்களின் (புதிதாகச் சேர்ந்தவர்கள் உட்பட) எண்ணிக்கை 1,18,195 ஆக இருந்தது. இது ஜூன் மாத இறுதியில் தேசிய ஓய்வூதிய அறக்கட்டளையின் (National Pension Trust) கீழ் இருந்த 27.6 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் (பங்களிப்பாளர்கள்) 4.3 சதவீதமாகும்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், UPS பற்றிய பின்வரும் முக்கிய அம்சங்களை கோடிட்டுக் காட்டினார்:
UPS-ஐத் தேர்ந்தெடுத்த மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் NPS-க்கு மாறுவதற்கான 'ஒருமுறை மட்டுமே மாற்றிக்கொள்ளும்' (one-way switch) வசதியை அரசு வழங்கியுள்ளது.
உறுதியான 50% ஓய்வூதியத்துடன், பணி ஓய்வுக்கான பணிக்கொடை (retirement gratuity) மற்றும் இறப்புக்கான பணிக்கொடை (பணியின் போது சந்தாதாரர் இறக்க நேரிட்டால் குடும்பத்திற்கு வழங்கப்படும் பலன்) ஆகியவையும் இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்கள், ஓய்வுபெறும் போது மாதம் குறைந்தபட்சம் ரூ. 10,000 தொகையைப் பெறவும் தகுதியுடையவர்கள்.
இதுவரை UPS-இல் மாற்றங்களைச் செய்வதற்கோ அல்லது அதை மாற்றுவதற்கோ எந்த முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை.
இதற்கு முன்னர், ஜூலை 20 அன்று கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அரசு, ஓய்வுபெற்ற 25,756 மத்திய அரசு ஊழியர்கள் (சந்தாதாரர்கள்) UPS-இன் கீழ் கூடுதல் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது.
ஓய்வூதியத் தொகையானது தங்கள் கடைசி மாத ஊதியத்தில் குறைந்தது 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். 2004-இல் நிறுத்தப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இது நடைமுறையில் இருந்தது. அதற்குப் பதிலாக NPS (இதில் ஊழியர்களின் பங்களிப்பும் அடங்கும்) கொண்டுவரப்பட்டது.
எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்கள் NPS-க்கான பங்களிப்பை நிறுத்திவிட்டு அதிலிருந்து வெளியேற விரும்பியதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2025 முதல் UPS-ஐச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. UPS-க்கு மாறுவதற்கான விருப்பத் தேர்வுக்கு மிகக் குறைந்த வரவேற்பே கிடைத்ததால், அதற்கான காலக்கெடுவை அரசு நவம்பர் 30, 2025 வரை நீட்டித்தது.
இத்திட்டம் NPS-இன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கானது. மார்ச் 31, 2025-க்குள் ஓய்வுபெற்ற மற்றும் குறைந்தது 10 ஆண்டுகள் நிரந்தரப் பணிபுரிந்த ஊழியர்களும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதன் பலனைப் பெறலாம். தகுதியுடைய மறைந்த ஊழியர்களின் சட்டப்பூர்வ வாழ்க்கைத் துணைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.