)
Bihar Assembly Election 2025 Phase 1 Constituencies: 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 18 மாவட்டங்ளில் உள்ள 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ. 6) நடைபெற இருக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நீளும். அதேநேரத்தில், வாக்குப்பதிவு மையங்களில் மாலை 5 மணிக்குள் டோக்கன் பெரும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு தொடரும். பீகாரில் மொத்தம் 7.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 14 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆவர்.
பீகார் தேர்தலை பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி - மகா கூட்டணி என இரண்டு முனை போட்டியே என்றே சொல்லலாம். மூன்றாவது தரப்பாக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தனித்தே இத்தேர்தலை சந்திக்கிறார். ஆனால் அவரது பங்கேற்பு அந்தளவிற்கு காத்திரமாக இருக்காது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரை, பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ஹிஸ்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மகாபந்தன் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், விகாஷீல் இன்ஷான் கட்சி, சிபிஐ, சிபிஐ-எம், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2020 பீகார் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாய கூட்டணி 125 இடங்களை வென்றது, மகா கூட்டணியோ 110 இடங்களைதான் வென்றது. இந்தச் சூழலில், கடந்த தேர்தலை போலவே இரு கூட்டணிகளுக்கும் இடையிலான போட்டி அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நாளை நடைபெற இருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவை பொருத்தவரை, ராஷ்டிரிய ஐக்கிய தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் - ஜனசக்தி ஜனதா தளம், துணை முதல்வரும் பாஜகவைச் சேர்ந்தவருமான சாம்ராட் தாக்கூர், பாஜகவின் இளம் வேட்பாளரான மைதிலி தாக்கூர் என மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அந்த வகையில், பீகார் முதற்கட்ட தேர்தலில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய டாப் 5 தொகுதிகளை இங்கு காணலாம்.
வாக்குப்பதிவுக்கு சில நாள்கள் முன் பீகாரின் மொகாமா தொகுதியில் போட்டியிடும் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷி பியூஷ் என்பவரின் உறவினர் கொல்லப்படுகிறார். அவர் கொல்லப்பட்ட வழக்கில், ஆளுங்கட்சி வேட்பாளர் அனந்த் சிங் கடந்த நவம்பர் 2ஆம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அனந்த் சிங் ஏற்கெனவே அப்பகுதியில் பெரிய ரவுடியாக அறியப்படுகிறார். இதற்கு முன் மொகாமா தொகுதியின் எம்எல்ஏவாக இருந்துள்ளார். கொலை சம்பவம் மற்றும் அதற்கு பிறகான கைது நடவடிக்கையால் இத்தொகுயில் கடும் பதற்றம் நிலவியது. அந்த வகையில் நாளை வாக்குப்பதிவு தினந்தன்றும் பெரும் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு ஆளுங்கட்சி ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராக அனந்த் சிங், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து வீனா தேவி, ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷி பியூஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவி ராகோபூர் தொகுதியில் போட்டியிடுவதால் இத்தொகுதி அதிகம் கவனத்தை பெறுகிறது. இவரை எதிர்த்து தேசிய ஜனநாய கூட்டணியில் பாஜக வேட்பாளர் சதிஷ் குமார், ஜன் சுராஜ் கட்சியின் சாஞ்சல் குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தேர்தலை பொருத்தவரை, இத்தொகுதி யாதவா சமூகத்தினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டதாகும். 1995ஆம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் வெற்றி பெற்றதில் இருந்து இங்கு ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வருகிறது. 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் மட்டும் ஐக்கிய ஜனதா தளம் வென்றது. கடைசி இரண்டு முறையும் இங்கிருந்துதான் தேஜஸ்வி யாதவ் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறார். எனவே, இதுவும் ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெறுகிறது.
முங்கர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் தொகுதியில் துணை முதலமைச்சரும், பாஜகவைச் சேர்ந்த சாம்ராத் சௌத்ரி போட்டியிடுகிறார். எதிர்க்கட்சித் தரப்பில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் அருண் ஷா போட்டியிடுகிறார். இந்த தொகுதியை பொருத்தவரை யாதவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 63 ஆயிரம், ராஜ்புத் மற்றும் பிராமணர்கள் உள்ளிட்டோர் 50 ஆயிரம், இஸ்லாமியர்கள் 20 ஆயிரம், குஷ்வாஹாஸ் 40 ஆயிரம், சாஸ் 35 ஆயிரம், தலித் சமூகத்தினர் 28 ஆயிரம் பேர் இத்தொகுயில் உள்ளனர். மேல்சபை உறுப்பினராகவே இருந்த சாம்ராஜ் சௌத்ரி சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
பீகாரின் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாய் யாதவ் தற்போது சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். லாலு பிரசாத் யாதவால் ஓரங்கட்டப்பட்ட மகன் ஆவார். தேஜஸ்வி யாதவின் மூத்த சகோதரர் ஆவார். இதே தொகுதியில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து முகேஷ் குமார் ரௌஷன் போட்டியிடுகிறார். லோக் ஜனசக்தி கட்சியின் சஞ்சய் சிங் போட்டியிடுகிறார். இவர் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஜனசக்தி ஜனதா தளம் கட்சியை உருவாக்கினார். இவர் 2015ஆம் ஆண்டில் இதே தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றார். தற்போது தனது புதிய கட்சியை வளர்க்கும் நோக்கில் அவர் இதில் நம்பிக்கையுடன் களம் கண்டுள்ளார்.
நாட்டுப்புற பாடகரும், பாஜகவின் இளம் வேட்பாளருமான மைதிலி தாக்கூர் தற்போது தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு வயது 25 ஆகும். இவரை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பினோத் மிஸ்ரா, ஜன் சுராஜ் கட்சி பிப்லா குமார் சௌத்ரி போட்டியிடுகிறார். இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அலிநகர் தொகுதி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கோட்டையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ