India Pakistan War Update: பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லைப்பகுதிகளில் இன்னும் பதற்றமே நீடித்து வருகிறது. பகல் பொழுதைக் காட்டிலும் நள்ளிரவு நேரங்களில் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்றிரவு சுமார் எல்லைப்பகுதிகளை ஒட்டியிருக்கும் இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள், முக்கிய ஆன்மீக தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மக்களிடையே மதப்பிரச்சனைகளை உண்டாக்கும் நோக்கில் பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை நேற்றிரவு நடத்தியிருக்கிறது.
இது தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தியில், வடக்கில் உள்ள பாரமுல்லாவிலிருந்து தெற்கில் உள்ள பூஜ் வரை, சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டுக் கோடு ஆகிய இரண்டிலும் 26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படும் ஆயுதமேந்திய ட்ரோன்களும் அடங்கும்.
பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோட்டா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், பூஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா உள்ளிட்ட பகுதிகள் பாகிஸ்தான் இலக்கு வைத்து தாக்கிய பகுதிகளில் அடங்கும். துருதிர்ஷ்டவசமாக, ஃபெரோஸ்பூரில் உள்ள பொதுமக்கள் பகுதியை ஆயுதமேந்திய ஒரு ட்ரோன் குறிவைத்து தாக்கியது, இதன் விளைவாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது, மேலும் அந்தப் பகுதி பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய ஆயுதப்படைகள் உட்சபட்ச முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. மேலும் இதுபோன்ற அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களும் எதிர்-ட்ரோன் அமைப்புகளைப் பயன்படுத்தி கண்காணிக்கப்பட்டு, அவற்றை இடைமறித்து அழிக்கும் பணியிலும் ராணுவம் ஈடுபட்டுள்ளது. தற்போதைய சூழலில் நிலைமை உன்னிப்பாகவும் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகிறது, மேலும் தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள குடிமக்கள், வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையற்ற நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்றாலும், அதிக விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியா மிக முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு வரும் நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கும், தீவிரவாதத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டியிருப்பதுடன், உலக வங்கி உள்ளிட்ட நிதி அமைப்புகளுக்கு நேரடியாக கோரிக்கையும் வைத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும் என இந்தியா மிகமிக அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் போர்: ஏடிஎம், யுபிஐ வங்கி சேவைகளுக்கு தடையா?
மேலும் படிங்க: 1971 IND PAK போர்: காணாமல் போன 54 இந்திய வீரர்கள்... இன்று வரை விலகாத மர்மம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ