India Letter To Pakistan: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த ஏப். 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Attack) சம்பவம் இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றத்தை உண்டாக்யிருக்கிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்திவைப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில், 1972 சிம்லா ஒப்பந்தம் முதற்கொண்டு இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்ள் அனைத்தையும் ரத்து செய்ய நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது, பாகிஸ்தான் அரசு.
மீண்டும் உறுதிசெய்த இந்திய அரசு
பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்த சில மணிநேரங்களில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைக்கும் முடிவை நேற்றிரவு இந்தியா மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டியதன் காரணத்தையும் மத்திய அரசு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்தியா கடிதம்
இதுகுறித்து, இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை புனரமைப்பு துறையின் செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி, பாகிஸ்தானின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சையத் அலி முர்தாசாவுக்கு நேற்று எழுதிய உள்ள கடிதத்தில்,"இந்த கடிதம், 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் பிரிவு XII (3) இன் கீழ், இந்த ஒப்பந்தம் மாற்றியமைக்கக் கோரி பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இந்திய அரசு அனுப்பிய அறிவிப்புகளை குறிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து ஏற்பட்ட சூழ்நிலைகளில், அதன் அடிப்படை மாற்றங்களை தீர்க்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை பாகிஸ்தான் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து - காரணம் என்ன?
மேலும்,"கணிசமாக மாறியுள்ள மக்கள்தொகை புள்ளிவிவரங்கள், எரிசக்தி வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டிய அவசியம், ஒப்பந்தத்தின் கீழ் நீர் பகிர்வுக்கு அடிப்படையான அனுமானங்களில் பிற மாற்றங்கள் ஆகியவை இந்த அடிப்படை மாற்றங்களில் அடங்கும்.
நல்லெண்ண அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை மதிக்க வேண்டிய கடமையே, அந்த ஒப்பந்தத்திற்கு அடிப்படையான ஒன்றாகும். ஆனால், அதற்கு பதில், இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீர் மீது பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகிறது.
உடனடியாக அமலுக்கு வரும் அறிவிப்புகள்
இதன் விளைவாக பாதுகாப்பு நிச்சயமற்ற தன்மை ஏற்படுகிறது. இதனால், ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவதை நேரடியாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் மூலம் செய்யப்பட்ட பிற மீறல்களைத் தவிர, ஒப்பந்தத்தின் கீழ் எதிர்பார்க்கப்பட்டபடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான இந்தியாவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் பதிலளிக்க மறுத்துவிட்டது. இதுவும் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.
இந்திய அரசு இதன் மூலம் 1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து நதி நீரை நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனலாம்.
பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பு
விவசாயம், மின் உற்பத்தி நிலையங்கள், பொருளாதார நடவடிக்கைகள் போன்ற அடிப்படை விஷயங்கில் பாகிஸ்தானின் பரந்த பகுதிகளுக்கு சிந்து நதி மிக அத்தியாவசியமான ஒன்றாகும். ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்துவிட்டது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும் வேளையில், சிந்து நதிதான் பாகிஸ்தானுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அதிரடி அறிவிப்புகள்
சிந்து நதி நீர் ஒப்பந்தம், SAARC விலக்கு விசா ரத்து, 48 மணிநேரத்திற்குள் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற போடப்பட்ட உத்தரவு, இனி SAARC விலக்கு விசா பாகிஸ்தானியர்களுக்கு கிடையாது, அடாரி - வாகா எல்லை மூடல் உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அறிவிப்புகள்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இந்த அறிவிப்புகளை தொடர்ந்து பாகிஸ்தான் அரசும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. பாகிஸ்தான் அரசின் நேற்றைய அறிவிப்பில்,"சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரைத் தடுக்க அல்லது திசைதிருப்ப எந்தவொரு முயற்சியும், நதிக்கரையின் உரிமைகளைப் பறிப்பதும், போர் அறிவிப்பாக கருதப்படும்" என தெரிவித்திருந்தது.
பாகிஸ்தான் தூதரகத்தில் இந்திய ஊழியர்களைக் குறைத்துக்கொள்வதாகவும், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க தடை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகா எல்லைச் சாவடியை மூடுவதாகவும், இருப்பினும் ஏப்.30ஆம் தேதி வரை அது திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீக்கிய யாத்ரீகர்கள் தவிர அனைத்து இந்திய குடிமக்களும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. SAARC திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை பாகிஸ்தானும் நிறுத்தியது.
மேலும் படிக்க | இந்தியா பக்கம் நிற்கும் நட்பு நாடுகள்.. போர் வெடித்தால் வெற்றி யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ