)
Kerala Thief Gives Back Jewel : உலகின் பல்வேறு இடங்களிலும் திருட்டு குற்றமானது நடைபெறுகிறது. அப்படி திருடுபவர்கள் அனைவரும் அந்த குற்றத்தை தேர்ந்தெடுத்து செய்வதில்லை. ஒரு சிலர், காலத்தின் சூழ்நிலையால் அந்த தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர். அப்படி தள்ளப்பட்டவர்கள், பெரும்பாலான நேரங்களில் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பர். அப்படிப்பட்ட ஒரு நபர் குறித்த செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நகையை திரும்ப கொடுத்த திருடன்:
திருட்டு போன பிறகு, பொருளை பறிகொடுத்தவர்களின் மனநிலை பலவாறாக இருக்கும். பயம், பதற்றம், கோபம், தொலைத்து விட்டோமே என்கிற அவமானம் உள்ளிட்ட பல உணர்வுகள் இருக்கும். அப்படித்தான் இந்த கேரளாவை சேர்ந்த கீதா என்கிற பெண்ணிற்கும், தங்க நகையை திருடு கொடுத்தவுடன் இருந்திருக்கிறது.
கீதா, தனது கனவருடன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது தனது தங்க செயின் ஒன்று களவு போனதாக பொய்னாச்சி பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அவர் தனது செயினின் அடையாளங்களை சொல்லி, அந்த புகாரினை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
பொதுவாக, இப்படி ஒரு பொருள் களவு போனால் அது திரும்ப கிடைப்பது என்பது அரிதுதான். அப்படியே அந்த தங்க நகை கிடைத்தாலும் அது பெரும்பாலான சமயங்களில் உருக்கியோ அல்லது பாதியாகவோதான் கிடைக்கும். ஆனால் இந்த பெண் விஷயத்தில் வேறு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
திருடியதை திருப்பி கொடுத்த திருடன்!
கீதா, தனது நகை திருடு போனதாக புகார் கொடுத்தவுடன், அந்த செயினின் போட்டோவை உள்ளூர் வாட்ஸ் ஆப் குழுக்களில் போலீசார் பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், செயினை தொலைத்த கீதாவும் அவரது கணவரும் ஒரு விஷயத்தை வீட்டிற்கு வெளியே கவனித்தனர்.
அவர்கள் வீட்டு திண்ணையில், திருட்டு போன அந்த தங்க செயின், பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அருகில் ஒரு கடிதமும் இருந்துள்ளது.
மன்னிப்பு கேட்ட திருடன்:
செயினிற்கு அருகே இருந்த கடிதத்தை எடுத்து, கீதாவும் அவரது கணவரும் படிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அந்த கடிதத்தில் திருடன் எழுதியிருந்த விஷயம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த செயின் எனது கைக்கு வந்து 9 நாட்கள் ஆகிவிட்டது. முதலில் இந்த செயின் என் கைக்கு வந்ததை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், அந்த செயினை கையில் எடுக்கும் போதெல்லாம் நான் ஏதோ சரியில்லாதது போல உணர்கிறேன், அதை தொட்டால் எனக்கு நடுக்கம் வருகிறது. எனவே, இதை என்ன செய்யலாம் என ரொம்ப யோசித்தேன். பின்னர், பின்னர்தான் வாட்ஸ் ஆப்பில் இந்த செயின் காணவில்லை என்பதை பார்த்தேன். அதனால், யாரும் இதை இழந்து தவிக்க கூடாது என்று முடிவு செய்தேன். நான் யார் என்று இங்கு குறிப்பிட விரும்பவில்லை. நீண்ட நாட்களாக உங்களிடம் இதை தராமல் வைத்திருந்ததற்கும் உங்களுக்கு வலியை கொடுத்ததற்கும் மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று அந்த திருடன் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலர், “இவர் திருடன் அல்ல..திருடர்” என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இன்னும் சிலர் வேறு ஒரு விஷயத்தையும் சொல்கின்றனர். அவர் திருடனாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இவர்கள் தவறவிட்ட செயினை யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ