)
இந்திய ரயில்வே தனது சேவைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக, விமான நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை போலவே, ரயில் பயணிகளின் லக்கேஜ் எடை மற்றும் அளவை கட்டுப்படுத்த கடுமையான ஒழுங்குமுறை திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நடவடிக்கை, பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் நல்ல பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது, குறிப்பாக நீண்ட தூர ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.

இந்த புதிய விதிகளின்படி, முக்கிய ரயில் நிலையங்களில், பயணிகள் தங்கள் உடைமைகளை மின்னணு எடை இயந்திரங்கள் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடை வரம்பை மீறும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் அல்லது அபராதம் விதிக்கப்படும். மேலும், எடை குறைவாக இருந்தாலும், அளவு பெரிதாக இருந்து, மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான உடைமைகளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
ஏசி முதல் வகுப்பு: 70 கிலோ வரை
ஏசி இரண்டாம் வகுப்பு: 50 கிலோ வரை
ஏசி மூன்றாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி வகுப்பு: 40 கிலோ வரை
பொது வகுப்பு: 35 கிலோ வரை
இந்த புதிய நடைமுறை, முதற்கட்டமாக வட மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும். இதில் பிரயாக்ராஜ் சந்திப்பு, கான்பூர் சென்ட்ரல், அலகாபாத் சந்திப்பு, மிர்சாபூர், துண்ட்லா, அலிகார் சந்திப்பு, கோவிந்த்புரி மற்றும் எட்டாவா போன்ற நிலையங்கள் அடங்கும். இந்த நிலையங்களில், பயணிகள் தங்கள் உடைமைகளை எடைபோட்டு, அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பதை உறுதி செய்த பின்னரே நடைமேடைகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த எடை கட்டுப்பாடுகள், ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் "அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின்" ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் கீழ், பிரயாக்ராஜ் சந்திப்பு ரயில் நிலையம், ரூ.960 கோடி முதலீட்டில், உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒன்பது மாடி கட்டிடமாக மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நவீன ரயில் நிலையங்களில் காத்திருப்பு அறைகள், அதிவேக வைஃபை, சோலார் மின்சக்தி, மழைநீர் சேகரிப்பு, மற்றும் டிஜிட்டல் தகவல் பலகைகள் போன்ற வசதிகள் இடம்பெறும். மேலும் வரும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், ரயில் நிலையங்களில், ரயில் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இந்த ரயில் டிக்கெட், விமான நிலையங்களில் உள்ளது போல ஒரு போர்டிங் பாஸ் ஆக செயல்படும். இந்த நவீன வசதிகள் கூட்டத்தை திறமையாக நிர்வகிக்க உதவும் என்று ரயில்வே நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ