India Pakistan Clashes History: பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகளின் மீது நடத்தப்பட்ட இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அந்நாட்டின் உள்கட்டமைப்புகளோ அல்லது ராணுவ கிடங்குகளோ தாக்கப்படவில்லை. பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போதும் நிலவும் இந்த மோதல் போக்கு இப்போதில்லை, 1947ஆம் ஆண்டு பிரிவினை முதல் இந்த மோதல் போக்கு தற்போது வரை நீடித்து வருகிறது. அந்த வகையில், 1947ஆம் ஆண்டு போர் முதல் தற்போது நடந்த ஆபரேஷன் சிந்தூர் வரை ஒரு மீள் பார்வையை இங்கு காணலாம்.
1947 - இந்தியா பாகிஸ்தான் முதல் போர்
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் கொஞ்ச நாளிலேயே இரு நாடுகளுக்கும் இடையே முதல் போர் வெடித்தது. இந்த போரை முதல் காஷ்மீர் போர் என்றும் அழைக்கின்றனர். பாகிஸ்தான் நாட்டின் ஆதரவு பெற்ற பழங்குடி போராளிகள், ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவியதை அடுத்து இந்த போர் வெடித்தது. இதனால் இந்தியா பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக துருப்புக்களை அனுப்பி எதிர் தாக்குதல் மேற்கொண்டது.
இந்த மோதல் 1949ஆம் ஆண்டு வரை நீடித்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின் பேரிலும், பேச்சுவார்த்தையின் பேரிலும் போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (LoC) பிரிக்கப்பட்டது. இதுவே, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையாக உள்ளது.
1965 - இந்தியா பாகிஸ்தான் 2வது போர்
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக, 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய-பாகிஸ்தான் இடையே 2வது போர் வெடித்தது. ஆபரேஷன் ஜிப்ரால்டர் என்ற பெயரில் மாறுவேடமிட்ட துருப்புக்கள், கிளர்ச்சியாளர்களுடன் காஷ்மீருக்குள் ஊடுருவி கிளர்ச்சிகளைத் தூண்ட பாகிஸ்தான் திட்டமிட்டது.
இதற்கு முழுமையான ராணுவ தாக்குதலுடன் இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. போர் தீவிரமான நிலையில், சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு, மத்தியஸ்தம் செய்தன. இதனால், போர் நிறுத்தம் ஏற்பட்டது, மேலும் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் பதற்றங்கள் நீடித்தது.
1971 - வங்கேதச விடுதலை போர்
1971ஆம் ஆண்டில், கிழக்கு பாகிஸ்தான் மீதான பாகிஸ்தான் மேற்கொண்ட அடக்குமுறை அங்கு பரவலான வன்முறை வெடிக்க காரணமாக இருந்தது. கிழக்கு பாகிஸ்தான் தான் தற்போதைய வங்கதேசம்.
வங்கதேச சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக இந்தியா (அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி) தலையிட்டு, கிழக்குப் பகுதியில் இருந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடுமையான போருக்கு பின்னர், பாகிஸ்தான் ராணுவம் 1971ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அன்று பாகிஸ்தான் ராணுவப் படைகள் சரணடைந்தன. இதன்மூலம், வங்கதேசம் விடுதலை பெற்று தனி நாடாக உருவெடுத்தது. இந்தப் போரில் கடற்படை மற்றும் வான்வழி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. இதில் இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தின் மீது தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
1999 - கார்கில் போர்
இந்தியா - பாகிஸ்தான் வரலாற்றில் 1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போர் தான், மிகவும் தீவிரமான மோதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் படைகள், பயங்கரவாதிகளுடன் இணைந்து, காஷ்மீரின் கார்கில் பகுதியில் உள்ள உயரமான சிகரங்களில் அத்துமீறி ஊடுருவின. அந்த பகுதியை மீட்க இந்தியா 'ஆபரேஷன் விஜய்'-ஐ தொடங்கியது.
கடுமையான மலைப் பிரதேசத்தில் நடந்த கடுமையான மோதலுக்கு பிறகு, 1999ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதிக்குள் பெரும்பாலான பிரதேசங்களின் கட்டுப்பாட்டை இந்தியா மீண்டும் கைப்பற்றியது. இந்த தினத்தை தான் 'கார்கில் வெற்றி தினம்' (Kargil Vijay Diwas) கொண்டாடப்படுகிறது. கார்கில் போர் இரு தரப்பிலும் கணிசமான உயிரிழப்புகளுக்கு பின் நிறைவடைந்தது.
2016 - உரி தாக்குதலும்... சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும்...!
2016ஆம் ஆண்டு செப்டம்பரில், ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் மீது கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது.
இந்த ரகசிய நடவடிக்கை, பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவப் பயன்படுத்திய பல ஏவுதளங்களை குறிவைத்து நடத்தப்பட்டது. மேலும், பல பயங்கரவாதிகளையும் கொன்று குவித்தது. இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கும் வகையில் இருந்தது.
2019 - புல்வாமா தாக்குதலும்... பாலகோட் பதில் தாக்குதலும்...
2019ஆம் ஆண்டில் புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்களை பயங்கரவாதிகள் கொன்றது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இது 1971ஆம் ஆண்டு போருக்குப் பிறகு இதுவே முதல்முறை வான்வழித் தாக்குதலை குறிக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை குறிவைத்த இந்தத் தாக்குதல்கள், வளர்ந்து வரும் பயங்கரவாதிகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வலிமையான பதிலடியாக பார்க்கப்பட்டது.
2025 - ஆபரேஷன் சிந்தூர்
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இன்று நள்ளிரவு தாக்குதல் தொடுத்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
இந்த மொத்த தாக்குதலும் 25 நிமிடங்களுக்குள் நடத்தப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலில், கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நடந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்க மூளையாக செயல்பட்ட இடமும் தாக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









