)
Monthly Rs 1000 For Unemployed Youths: இந்திய அரசியலில் அடுத்து பலரும் எதிர்பார்க்கும் முக்கியமான தேர்தல் என்றால் அது, இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பீகார் சட்டப்பேரவை தேர்தல்தான். இன்னும் தேர்தல் குறித்த அட்டவணை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படவில்லை. நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தல் ஆளுங்கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு மட்டுமின்றி, அக்கட்சி இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையை ஏற்றிருக்கும் பாஜகவும் முக்கியமானது. அதேநேரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் பீகாரை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. ராகுல் காந்தி பீகார் நெடுக தற்போது நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
மற்றொருபுறம், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், முதியோர், தொழிலாளர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரை ஈர்க்கும் வகையிலான திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். திட்டங்களை அறிவிப்பது மட்டுமின்றி அவற்றை விரைந்து செயல்படுத்துவதிலும் முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில், வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பட்டதாரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் நிதிஷ் குமார் இன்று (செப். 18) அறிவித்துள்ளார்.
'முக்கிய மந்திரி நிச்சய சுயம் சகாயத பட்டா யோஜனா' என்ற திட்டத்தின் கீழ், பட்டப்படிப்பு முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையை இரண்டு ஆண்டு காலத்திற்கு வழங்கும் என்று முதல்வர் நிதிஷ் குமார் இன்று அறிவித்தார். இதற்கு முன், இடைநிலைத் தேர்வுகளில் மட்டும் தேர்ச்சி பெற்று வேலையில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது இது பட்டப்படிப்பு முடித்த நபர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"பீகார் அரசின் ஏழு தீர்வுகள் திட்டத்தின் கீழ், முன்னர் செயல்படுத்தப்பட்ட 'முக்கிய மந்திரி நிச்சய சுயம் சகாயத பட்டா யோஜனா' இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என நிதிஷ் குமார் இன்று அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில், "இத்திட்டத்தின் கீழ், முன்னர் இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுய உதவித் திட்டத்தின் பலன், கலை, அறிவியல் மற்றும் வணிகத்தில் தேர்ச்சி பெற்ற வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கும் இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எங்கும் எந்தப் படிப்பையும் தொடராத, வேலை/வேலைவாய்ப்புக்காக பாடுபடும், சுயதொழில் இல்லாத அல்லது அரசு, தனியார் அல்லது அரசு சாரா வேலைகளைப் பெறாத 20-25 வயதுக்குட்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு முதலமைச்சரின் தீர்வுகள் சுயஉதவி உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.1000 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இளைஞர்கள் வேலையில்லாததால் தவறான பாதைக்குச் செல்லாமல் வேலைவாய்ப்பை பெறவும், அதற்கேற்ற திறனை மேம்படுத்திக்கொள்வதிலும் நேரம் செலவழிக்க வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு எவ்வித பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல் தனியே தயாராகி வருபவர்களுக்கும் இது பெரியளவில் உதவும். இதன்மூலம் அவர்களின் குடும்பமும் அவர்களுக்கு ஆதரவளிக்கும். ஓரளவு நிதி சுதந்திரமும் கிடைக்கும். இதேபோல் நேற்று நிதிஷ் குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, நவராத்திரியை முன்னிட்டு 1.60 கோடிக்கும் மேல்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகையை நேற்று விடுவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ