)
டெல்லி: தனியார் நிறுவனங்கள் தவறு செய்தால் சட்ட நடவடிக்கை, சிபிஐ விசாரணை எனப் பாயும் அரசு, பொதுப் பணத்தைக் கையாளும் ஒரு அரசு நிறுவனமே பல நூறு கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தினால் அதை என்னவென்று சொல்வது?
மக்களின் வரிப்பணம் சுமார் 1,600 கோடி ரூபாயை நஷ்டப்படுத்தியதாக, மத்திய அரசின் 'தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்' (NARCL) தற்போது கடுமையான விவாதத்திற்கும் கேள்விகளுக்கும் உள்ளாகியுள்ளது. எந்த ஒரு முறையான ஏல நடைமுறையையும் (Price Discovery) பின்பற்றாமல், கடனைத் திருப்பிச் செலுத்தாத அதே டிஃபால்ட்டர் நிறுவனத்திற்கே மிகக் குறைந்த விலையில் கடனை முடித்து வைத்துள்ளது இந்த அரசு நிறுவனம்.
அரசு அமைப்புகளில் பேனா வாங்குவது முதல் பெரிய திட்டங்கள் வரை அனைத்திற்கும் டெண்டர் மற்றும் ஏலம் விடுவதுதான் விதிமுறை. ஆனால், இங்கு 1,600 கோடி ரூபாய் மக்கள் பணம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், ஏலம் நடத்த NARCL எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஜீ நியூஸ் ஊடகத்தின் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு (SIT) கிடைத்துள்ள பிரத்யேக ஆவணங்கள், இந்த முறைகேட்டின் அதிர்ச்சியூட்டும் பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.
இந்த ஒட்டுமொத்த விவகாரத்தின் மையப்புள்ளியாக இருப்பது 'ஆப்சன் குளோபல் பிரைவேட் லிமிடெட்' (Agson Global Pvt Ltd) என்ற நிறுவனம். இந்நிறுவனம் பல வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பிலிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தாததால், இந்த கணக்கு வாராக்கடனாக (NPA) அறிவிக்கப்பட்டது.
வங்கிகளால் வசூலிக்க முடியாத இந்த கடன் விவகாரம், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு (NCLAT) சென்றது. ஆப்சன் குளோபல் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்த போதிலும், இந்த கடன் ஏய்ப்பை தீர்ப்பாயம் கடுமையானதாகக் கருதியது.
அங்கேயும் நிவாரணம் கிடைக்காததால் விவகாரம் உச்ச நீதிமன்றத்தை எட்டியது. ஆனால், உச்ச நீதிமன்றமும் NCLAT உத்தரவில் தலையிட மறுத்துவிட்டது. நீதிமன்ற நடைமுறைகளுக்குப் பிறகு, வங்கிகளின் இந்த வாராக்கடன், பொதுத்துறை சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான NARCL-க்கு மாற்றப்பட்டது.
வங்கிகளில் முடங்கியுள்ள பெரிய வாராக்கடன்களை மீட்டு, அதற்கு தீர்வு காண்பதற்காகவே சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு NARCL உருவாக்கப்பட்டது. ஜீ மீடியாவிடம் உள்ள அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, ஆப்சன் குளோபல் நிறுவனத்திடமிருந்து NARCL வசூலிக்க வேண்டிய மொத்தத் தொகை 2,172 கோடி ரூபாய்.
இந்த கடன் விவகாரத்தில், கடன் வழங்குநர்கள் குழுவில் (Committee of Creditors) 100 சதவீத வாக்குரிமை NARCL வசமே இருந்தது. அதாவது, நிதி சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் இந்த அரசு நிறுவனத்திடம் மட்டுமே இருந்தது.
இவ்வளவு அதிகாரம் இருந்தும், NARCL நிறுவனம் வெறும் 579 கோடி ரூபாய்க்கு, கடனை ஏய்ப்பு செய்த அதே ஆப்சன் குளோபல் நிறுவனத்துடன் 'லோன் செட்டில்மென்ட்' செய்து கொண்டுள்ளது. எளிய மொழியில் கூறினால், 2,172 கோடி ரூபாய் கடன் வாங்கிய ஆப்சன் குளோபல் நிறுவனம், வெறும் 579 கோடி ரூபாயை மட்டும் திருப்பிச் செலுத்திவிட்டு அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தப்பித்துக்கொண்டது. இதன் மூலம் பொதுப் பணத்தில் 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பொதுப் பணத்தை நஷ்டப்படுத்துவதற்காகவே NARCL விதிகளை மீறியதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அரசு சொத்துக்களை விற்கும்போது அதிகபட்ச விலையைப் பெறுவதற்காக திறந்தவெளி ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால், NARCL இந்த செட்டில்மென்ட்டின் போது எந்த ஒரு ஏல நடைமுறையையும் மேற்கொள்ளவில்லை. ஒருவேளை ஏலம் விடப்பட்டிருந்தால், 579 கோடி ரூபாய்க்குப் பதிலாக வேறு ஏலதாரர்கள் 1000 அல்லது 1500 கோடி ரூபாய் வரை கூட விலை கோரியிருக்க வாய்ப்பிருந்தது.
வேறு யாரும் ஏலம் கேட்க NARCL வாய்ப்பளிக்கவில்லை என்பதே இங்கு முக்கியக் குற்றச்சாட்டு. இதனால், ஆப்சன் குளோபல் நிறுவனத்துடன் NARCL கூட்டுச் சேர்ந்து செயல்பட்டதா என்ற சந்தேகம் வலுக்கிறது.
ஜீ மீடியாவின் ஆவண ஆய்வில், ஆப்சன் குளோபல் நிறுவனத்திற்கு சோனிபட்டின் முக்கியப் பகுதியில் 30 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்துள்ளது. இது தவிர, அந்த நிறுவனத்திற்கு சுமார் 300 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் க்ளைம் (Insurance Claim) வர வேண்டியதும் இருந்தது. இந்த சொத்துக்களை கணக்கில் காட்டியிருந்தால் ஏல மதிப்பு 579 கோடி ரூபாயை விட பல மடங்கு அதிகரித்திருக்கும். ஆனால், செட்டில்மென்ட் செய்யும் போது NARCL இந்த சொத்து விபரங்களை உறுதிப்படுத்தக் கூட முற்படவில்லை.
தனியார் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் (Private ARCs) வாராக்கடன் வசூலில் முறைகேடு செய்கின்றன என்ற புகார்களைத் தொடர்ந்தே, மத்திய அரசு இந்த NARCL நிறுவனத்தைத் தொடங்கியது. ஆனால் இப்போது அரசு நிறுவனமே இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளது.