)
India Pakistan Conflict, Indus Water Treaty: கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய இந்திய அரசு உடனடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
Indus Water Treaty: இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர் கோரிக்கை
இந்தியாவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு நான்கு முறை பாகிஸ்தான் அரசு தண்ணீரை திறந்து விடும்படி கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிந்து நதி நீர் பாகிஸ்தானின் குடிநீர், பாசனம், மின்சார உற்பத்தி போன்ற பல்வேறு விஷயங்களுக்கு அவசியம் ஆகும்.
1960ஆம் ஆண்டில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக போடப்பட்டிருந்த ஒப்பந்தம் பல போர்களை கடந்திருந்தாலும், இந்த பயங்கரவாத தாக்குதாலை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தற்போது பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. நிலத்தடி நீரும் கூட பாதிக்கப்படலாம் என்னும் நிலையில் நதிநீரை திறந்துவிடும்படி பாகிஸ்தான் இந்தியாவை வேண்டி கோரிக்கை விடுத்துள்ளது.
Indus Water Treaty: அடம்பிடிக்கும் இந்தியா
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்குதல் நடத்தி பயங்கரவாதத்திற்கு எதிராக பெரும் நடவடிக்கையை எடுத்தது. அதற்குப் பிறகும் கூட பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்துதான் இந்திய அரசிற்கு கடிதம் எழுதி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தியா அதன் முடிவில் விடாப்பிடியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, பயங்கரவாதமும் வணிகமும் இணைந்திருக்க முடியாது என்றும் ரத்தம் ஓடும்போது தண்ணீரும் ஓட முடியாது என்றும் தங்களின் முடிவில் உறுதியாக இருந்துள்ளது, இந்தியா. சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலும், நட்புறவின் அடிப்படையிலும் போடப்பட்ட ஒப்பந்தம் ஆகும். ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை மீறிய பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தி ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதனாலேயே ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Indus Water Treaty: பாகிஸ்தான் எழுதிய 4 கடிதங்கள்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் கொண்டுவர இந்தியாவைக் கோரும் நான்கு கடிதங்களை பாகிஸ்தானின் நீர்வள அமைச்சக செயலாளர் சையத் அலி முர்தாசா, இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. தொடர்ந்து, அவற்றை வெளியுறவு அமைச்சகத்திற்கும் அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது தேசிய பாதுகாப்பு சிறப்புரிமையைப் பயன்படுத்தி நம்பக்கத்தன்மை உடனும், அதனை மாற்ற முடியாத வகையிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இந்த ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்று இந்தியா தெளிவாக தெரிவித்துள்ளது. உலக வங்கியால் மத்தியஸ்தத்துடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், முதல்முறையாக இந்தியா இதை நிறுத்திவைத்தது.
Indus Water Treaty: பாகிஸ்தான் பிரதமருக்கு கடும் அழுத்தம்
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் தொடர்ச்சியான தாக்குதலால் பின்னடைவுச் சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களை தீர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகிறாராம். பாகிஸ்தானின் பிற அரசியல் கட்சியினர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் இதுகுறித்து அழுத்தம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் பாகிஸ்தான் செனட்டர் சையத் அலி ஜாபர் பேசுகையில், "தண்ணீர் பிரச்சனையை இப்போதே தீர்க்காவிட்டால் நாம் பசியால் இறந்துவிடுவோம். சிந்து நதி படுகை நமது உயிர்நாடி, ஏனெனில் நம் தண்ணீரில் நான்கில் மூன்று பங்கு நாட்டிற்கு வெளியில் இருந்து வருகிறது. 10 பேரில் ஒன்பது பேர் தங்கள் வாழ்க்கைக்கு சிந்து நதி படுகையை நம்பியுள்ளனர். நமது பயிர்களில் 90 சதவீதம் இந்த தண்ணீரை நம்பியுள்ளன. மேலும் நமது அனைத்து மின் திட்டங்களும் அணைகளும் அதன் மீது கட்டப்பட்டுள்ளன. இது நம் மீது தொங்கும் ஒரு தண்ணீர் குண்டு போன்றது, ஆனால் நாம் அதை செயலிழக்கச் செய்ய வேண்டும்" என்றார். இதன்மூலம் ஷெரீப்புக்கு அழுத்தம் உருவாகி உள்ளது.
Indus Water Treaty: இந்தியாவின் முடிவு இதுதான்...!
கடந்த மே 24ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் முறைசாரா கூட்டத்தில் பாகிஸ்தானின் தவறான தகவல் பிரச்சாரத்திற்கு பதிலளித்த இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ், "எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் அதிகரித்து வரும் பாதுகாப்பு சார்ந்த அச்சங்கள் மட்டுமின்றி, மாசு இல்லா எரிசக்தி உற்பத்தி, காலநிலை மாற்றம், மக்கள்தொகை மாற்றம் ஆகியவற்றுக்கான வளர்ந்து வரும் தேவைகளிலும் தொலைநோக்கு அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த உள்கட்டமைப்பில் ஏற்படும் எந்தவொரு மாற்றங்களையும், ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்படும் விதிகளில் ஏற்படும் எந்தவொரு மாற்றங்களையும் பாகிஸ்தான் தொடர்ந்து தடுத்து வருகிறது" என குற்றஞ்சாட்டினார்.
அதாவது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய வேண்டி கடந்த 2 ஆண்டுகளில் பல சந்தர்பங்களில் கேட்டுக்கொண்டாலும், பாகிஸ்தான் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளது. தற்போது பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் உருவாகியிருக்கும் சூழலில் இந்தியாவின் வேண்டுகோளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்கு வரும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் செயலுக்கு வராது என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ