)
Rahul Gandhi Allegations On Election Commission: மக்களவைத் தேர்தலின் போது ஆளும் மத்திய பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தல் ஆணையம் மோசடி செய்திருப்பதாக ராகுல் காந்தி பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ராகுல் காந்தி இன்றைய செய்தியாளர் சந்திப்பில், வாக்காளர் பட்டியலில் போலி நபர்கள் சேர்க்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் கர்நாடக வாக்காளர் பட்டியலை எடுத்துக்காட்டி தனது கருத்தை உறுதிப்படுத்த முயன்றார்.
மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் அடங்கிய, மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில் மிகப்பெரிய வாக்கு திருட்டு நடத்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். மகாதேவபுரா தொகுதியில் மொத்தம் 6.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில் அதில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் காந்தி அதிர்ச்சிகர தகவலை அளித்துள்ளார். "காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட ஆய்வில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள், போலியான முகவரியில் உள்ளனர், கர்நாடகாவின் மகாதேவாபுர தொகுதியில் பெரும் வாக்காளர்கள் இப்படி உள்ளனர்" என்றார்.
LIVE: Press Conference - #VoteChori | Indira Bhawan, New Delhi https://t.co/BlZwacZpto
— Rahul Gandhi (@RahulGandhi) August 7, 2025
2024ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலின்போது, மத்திய பெங்களூரு மக்களவை தொகுதி கடும் போட்டியை சந்தித்தது. வாக்கு எண்ணிக்கையின்போது காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலி கான் தான் பெரும்பாலும் முன்னணி வகித்து வந்தார். ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் வெறும் 32 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து பாஜகவின் பிசி மோகன் என்பவர் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். அந்த தொகுதியில் காங்கிரஸ் 6,26,208 வாக்குகளை பெற்றிருந்தனர், பாஜக 6,58,915 வாக்குகளை பெற்றிருந்தனர்.
இதுகுறித்து விரிவாக பேசிய ராகுல் காந்தி, மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் மொத்தம் 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன என்றும் இதில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே அதிக வாக்குளை பெற்றிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், மகாதேவபுரா தொகுதியில் மட்டும் காங்கிரஸ் 1,14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
மகாதேவபுரா தொகுதியில் மட்டும் சுமார் 1,00,250 வாக்கு திருட்டு நடந்திருப்பதாக அவர் கூறினார். அதாவது, 11 ஆயிரத்து 965 போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், போலி மற்றும் முறையன முகவரி இல்லாமல் 40,009 வாக்காளர்கள் இருந்துள்ளனர், மேலும் ஒரு முகவரியில் பல பேர் என அதில் மட்டும் 10 ஆயிரத்து 452 வாக்காளர்கள் இருந்தனர். முறையான புகைப்படம் இல்லாமல் 4 ஆயிரத்து 132 வாக்காளர்கள் இருந்தனர். Form 6 படிவத்தை சுமார் 33 ஆயிரத்து 692 வாக்காளர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர் என ராகுல் காந்தி புள்ளிவிவரங்களை அடுக்கினார். Form 6 என்பது புதிய வாக்காளர் அல்லது முதல்முறை வாக்காளர்களுக்கான பெயர் சேர்க்கும் படிவமாகும், இதனை தவறாக பயன்படுத்தி பலரும் போலி வாக்காளராக சேர்ந்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் முறையில் வழங்காமல் இருப்பதன் பின்னணியிலும் மோசடி இருப்பதாக ராகுல் காந்தி கூறினார். ஒருவேளை வாக்காளர் பட்டியல் டிஜிட்டல் முறையில் இருந்தால் வெறும் 30 வினாடிகளில் இவர்களின் மோசடி அம்பலமாகும் என்றும் ராகுல் காந்தி பேசினார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், "இது இங்கே ஒரு சவாலான விஷயம். இது ஏழு அடிக்கு நீண்ட காகிதம். நீங்கள் இரண்டு முறை வாக்களித்திருக்கிறீர்களா அல்லது உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், நான் உங்கள் படத்தை எடுக்க வேண்டும், அதன் பின்னர் அதை ஒவ்வொரு காகிதத் துண்டுடனும் ஒப்பிட வேண்டும். இது மிகவும் கடினமான செயல்" என்றார்.
மேலும் இதுகுறித்து ராகுல் காந்தி, "இதை (மகாதேவபுரா போலி வாக்காளர்கள்) கண்டுபிடிக்கவே எங்களுக்கு ஆறு மாதங்கள் எடுத்தது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு முறையில் தரவைக் கொடுத்தால், இதை கண்டுபிடிக்க வெறும் 30 வினாடிகளே எடுக்கும். எங்களுக்கு ஏன் இதுபோன்ற தரவு வழங்கப்படுகிறது? அப்போதுதான் இதை ஆய்வு செய்ய முடியாது. இந்த ஆவணங்கள் Optical Characted Recognition முறையை அனுமதிக்காது" என்றார்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை நிலவுகிறது, ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் மட்டும் ஆட்சிக்கு எதிரான மனநிலையால் பாதிக்கப்படாத ஒரு ஜனநாயகக் கட்சி என்றால் அது பாஜகவாக மட்டுமே இருக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஒரே விஷயத்தைச் சொல்கின்றன. இதை நீங்கள் ஹரியானா தேர்தலிலும், மகாராஷ்டிரா தேர்தலிலும் பார்த்திருப்பீர்கள், திடீரென தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய ஏற்ற இறக்கங்களுடன் முற்றிலும் மாறுபட்ட வகையில் இருக்கிறது" என மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீதான தனது சந்தேகத்தை அவர் எழுப்பினார்.
2024ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இருப்பினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களை வென்றிருந்தது. மக்களவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் பின்னடைவையே சந்திருந்ததை குறிப்பிட்டே ராகுல் காந்தி இந்த கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ