Judge Yashwanth Verma Transfer: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த வாரம் கட்டுக்கட்டான கணக்கில் வராத பணத்தை கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Judge Yashwanth Verma Transfer: இடமாற்றம் இறுதி முடிவல்ல...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்து கொலீஜியம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் மற்றும் தலைமை நீதிபதி இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், இடமாற்றம் என்பது இதன் மீதான இறுதிக்கட்ட நடவடிக்கை இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவர் மீதான நடவடிக்கையில் இது ஒரு செயல்முறை ஆகும் என்றும் எதிர் வரும் காலங்களில் தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொலீஜியம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Judge Yashwanth Verma Transfer: பணத்தை கண்டுபிடித்தது எப்படி?
யஷ்வந்த் வர்மா கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் ஹோலி பண்டிகையை ஒட்டி அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயணைப்பு வீரர்கள் தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை பார்த்ததை அடுத்து, போலீசாரிடம் உடனே தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்தே இந்த சம்பவம் பொதுவெளிக்கு வந்தது, செய்திகளும் வெளியாகின. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 5 உறுப்பினர்கள் அடங்கிய கொலீஜியம் இன்று கூடியது.
Judge Yashwanth Verma Transfer: ராஜினாமா செய்வாரா நீதிபதி யஷ்வந்த் வர்மா?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்திருந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதை தொடர்ந்தே, யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்ய கொலீஜியம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரிடம் நீதிபதி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யவும் பேச்சுக்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின்றன.
ஒருவேளை, அவர் ராஜினாமா செய்ய மறுத்தால், ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முறையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.
அந்த குழு இந்த விவகாரம் குறித்து அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, குற்றஞ்சாட்டப்படும் தவறான நடத்தை கடுமையானது என தலைமை நீதிபதி கருதினால், அவர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை ராஜினாமா செய்ய வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. நீதிபதி மறுக்கும்பட்சத்தில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 124(4) இன் கீழ், நாடாளுமன்றத்தால் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க தலைமை நீதிபதி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது குற்றமாகாது... சென்னை உயர் நீதிமன்றம் நச் தீர்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ