National News In Tamil: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதா (Waqf Amendment Act), பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, வக்பு வாரிய திருத்தம் மசோதாவுக்கு கடந்த ஏப். 3ஆம் தேதி நடந்த நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் 288 உறுப்பினர்கள் ஆதராகவும், 232 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
Waqf Amendment Act: அமலுக்கு வந்த வக்பு வாரிய திருத்தச் சட்டம்
தொடர்ந்து ஏப். 4ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய மசோதா 128 உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கும் நிறைவேறியது. மாநிலங்களவையில் 95 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஏப். 6ஆம் தேதி நாடாளுமன்ற நிறைவேற்றிய வக்பு வாரிய மசோதாவுக்கு, கடந்த ஏப். 6ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் அளித்த நிலையில், வக்பு வாரிய திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இருப்பினும் வக்பு வாரிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
Waqf Amendment Act: மேற்கு வங்க போராட்டத்தில் வெடித்த வன்முறை
குறிப்பாக, மிக மோசமானதாக மேற்கு வங்காளத்தில் (West Bengal Protest) நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் மூன்று பேர் உயிரிழந்தனர். பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். திருத்தப்பட்ட வக்பு சட்டத்தை தனது அரசாங்கம் செயல்படுத்தாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Waqf Amendment Act: இன்று விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்
வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் (Supreme Court) இன்று இந்த மனுக்களை விசாரிக்க உள்ள நிலையில், 6 பாஜக ஆளும் மாநிலங்கள் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாதாட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார், நீதிபதி கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு எடுக்கிறது.
Waqf Amendment Act: எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்
முன்னதாக, சட்டமன்றத்தின் எல்லைக்குள் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதேநேரத்தில், தற்போது திருத்தப்பட்டுள்ள இந்த சட்டம், சமத்துவத்திற்கான உரிமை, மத நடைமுறைகளை பின்பற்றும் உரிமை உள்ளிட்ட அரசியலமைப்பின் பல அடிப்படை உரிமைகள் நசுக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர்கள் வாதிட்டதை அடுத்து இந்த மனுக்களை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர். மேலும், மத அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ஜமியத் உலேமா ஹிந்த், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆகியவையும் மனுதாக்கல் செய்துள்ளன.
Waqf Amendment Act: ஆதரவாக வாதிடும் 6 மாநில அரசுகள்
அதே நிலையில், பாஜக ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், அசாம், மகாராஷ்டிரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் இந்த சட்டத்தை ஆதரித்து வாதிடுவதற்கு விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன.
Waqf Amendment Act: சட்டத்தை எதிர்ப்பது ஏன்?
மேலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சில மனுக்கள் இந்தச் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளன. அச்சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்த வேண்டும் என்றும் சில மனுக்களில் கோரப்பட்டுள்ளன. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது, தன்னிச்சையானது மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பாகுபாடு என்றும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி உச்ச நீதிமன்றத்தில் மனுவில், "திருத்தப்பட்ட சட்டம் வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்புகளை ரத்து செய்யும் வகையில் உள்ளது. வக்பு சொத்துக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பைக் குறைத்து, மற்ற மதத்தினருக்கு அதை தக்கவைத்துக்கொள்வது பாரபட்சமானது" என குறிப்பிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் அமானத்துல்லா கான் அளித்துள்ள மனுவில், "வக்பு வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத உறுப்பினர்களைச் சேர்ப்பது அரசியலமைப்பு பிரிவு 14ஐ மீறுவதாகிறது. மேலும், மத சொத்து நிர்வாகத்தின் நோக்கத்துடன் எந்த பகுத்தறிவு தொடர்பையும் கொண்டிருக்கவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | வக்பு மசோதாவை கொண்டு வர என்ன காரணம்? - புட்டு புட்டு வைத்த அமித் ஷா
மேலும் படிக்க | EPFO முறையில் அதிரடி மாற்றம்! லட்சக்கணக்கான ஊழியர்கள் மகிழ்ச்சி
மேலும் படிக்க | ரூ.13,500 கோடி மோசடி: பெல்ஜியத்தில் கைதான வைர வியாபாரி... யார் இந்த மெகுல் சோக்சி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









