)
Supreme Court On Rahul Gandhi Case: கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், உதய் சங்கர் ஸ்ரீவத்சவா என்பவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குற்றவியல் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு லக்னோவில் உள்ள எம்பி - எம்எல்ஏ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
சீனா உடனான மோதலில், இந்திய ராணுவத்திற்கு எதிராக ராகுல் காந்தி பேசியதாக வழக்கு போடப்பட்டது. ராகுல் காந்தி அவரது பாரத் ஜோடா யாத்திரையின்போது, "அருணாச்சலப் பிரதேசத்தில் சீன படைகள் இந்திய ராணுவத்தை கடுமையாக தாக்குகின்றன" என பேசியதே வழக்கு போடுவதற்கு முக்கிய காரணமாகும். 2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்தியா - சீனாவுக்கு இடையே தவாங் பகுதியில் நடந்த மோதலை குறிப்பிட்டு ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருந்தார்.
ராகுல் காந்தியின் பேச்சு பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என்றும் இந்திய இராணுவத்தை மனச்சோர்வடையச் செய்து தேசிய மன உறுதியை சேதப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் மனுவில் உதய் சங்கர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், தான் யாரையும் குறிப்பிட்டு அவதூறாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும் இந்த மனுவை ரத்து செய்யக்கோரியும் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது.
அவதூறான கருத்துக்களால் மூன்றாம் தரப்பினர் பாதிக்கப்பட்டாலும் கூட அவர் பாதிக்கப்பட்ட நபராக கருதப்படலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அனைத்து தொடர்புடைய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 500 கீழ் குற்றத்திற்காக ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைக்க விசாரணை நீதிமன்றம் சரியாக முடிவெடுத்துள்ளது" என்று் உத்தரவில் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, லக்னோவில் உள்ள எம்பி - எம்எல்ஏ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகி நிபந்தனை ஜாமின் பெற்றார். தொடர்ந்து அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
விசாரணையின்போது, ராகுல் காந்தியை நீதிபதிகள் கடுமையாக சாடினர். குறிப்பாக, இந்திய நாட்டின் 2000 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்திருப்பதாக உங்களுக்கு (ராகுலுக்கு) எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பினர். மேலும், "நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் ஏதாவது நம்பகமான தகவல் இருக்கிறதா? நீங்கள் ஒரு உண்மையான இந்தியரா இருந்திருந்தால், இதையெல்லாம் சொல்ல மாட்டீர்கள். எல்லை தாண்டி ஒரு மோதல் நடக்கும்போது, இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கத்திற்கு மாறானதா?" என்று கேள்வி எழுப்பினர்.
அவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்றும் நாட்டுப் பிரச்னைகளை கூட ஊடகத்தில் அவர் பேசக்கூடாதா என ராகுல் காந்தி தரப்பு வாதிட்டபோது, "நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ, அதை ஏன் நாடாளுமன்றத்தில் சொல்லக்கூடாது? சமூக ஊடகப் பதிவுகளில் இதை ஏன் சொல்ல வேண்டும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து விதித்து உத்தரவிட்டது. மேலும், வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ