TET Compulsory: ஆசிரியர்கள் தங்களின் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

TET Compulsory For Teachers: ஆசிரியர்கள் தங்களின் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் ஆசிரியர்கள் பணியில் தொடரலாம்.
அதேவேளையில், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் வாய்ப்புள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமெனில் இனி TET தேர்வை எழுதி, அதில் தகுதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் அவர்கள் வேலையை ராஜினாமா செய்யலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் (ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு) TET கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில்தான் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு TET தேர்வை மாநிலங்கள் கட்டாயப்படுத்த முடியுமா? என்பது குறித்தும், இதனால் அரசியலமைப்பு உரிமைகளில் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் ஆராயவும் உச்ச நீதிமன்றம் அதன் அரசியலமைப்பு அமர்வுக்கு பரிந்துரை அளித்துள்ளது.
ஏற்கனவே TET எழுதாமல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, குறிப்பாக பதவி உயர்வுகள் மற்றும் சிறுபான்மை நிறுவன உரிமைகள் தொடர்பான சூழலில், TET தேர்வை கட்டாயப்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்த சர்ச்சைகளில் தொடர்ந்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் மீது TET தேர்வை கட்டாயப்படுத்துவதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. TET தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகள் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) மூலம் தீர்மானிக்கப்படும். கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று, பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று ஒரு அறிவிப்பை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டது.
எனவே, ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு TET தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியது. இது பின்னர் கால அவகாசம் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாட்டின் பல ஆசிரியர்கள் சென்னை நீதிமன்றத்தை அணுகினர். சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கடந்த ஜூன் மாதத்தில் புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் 2011ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்க TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் ஆனால் பதவி உயர்வுக்கு TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் உத்தரவிட்டது. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றம் பணியில் நீடிப்பதற்கும், பதவி உயர்வுக்கும் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ