)
National News In Tamil: மகாராஷ்டிராவில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை இந்தியை மூன்றாவது மொழியாக கற்றுக்கொடுக்கும் முடிவை அம்மாநில அரசு அறிவித்தது. பாஜக அரசின் இந்த அறிவிப்பால் பிளவுப்பட்டிருந்த உறவினர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் இந்தி திணிப்பு எதிர்ப்பு புள்ளியில் ஒன்றிணைந்து கைக்கோர்த்தனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இருவரும் ஒரே மேடையில் தோன்றி, தொடக்கப் பள்ளியில் இந்தி திணிப்புக்கு எதிராக உரையாற்றினார். அவர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்திருந்தார்.
Stalin - Uddhav Thackeray: வரவேற்ற ஸ்டாலின்
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், "இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று (அதாவது நேற்று) மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
Stalin - Uddhav Thackeray: 'மராட்டியத்தின் எழுச்சி...'
"உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?" என்றும், "இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?" என்றும் ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) July 5, 2025
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக…
அதுமட்டுமின்றி அந்த பதிவில், "இந்தி திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், 'இந்தி படித்தால் வேலை கிடைக்கும்' என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளை போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அறிவுக் கண்களைத் திறக்கும்" என்றும் பதிவிட்டிருந்தார்.
Stalin - Uddhav Thackeray: சஞ்சய் ராவத் கூறியது என்ன?
ஆனால், தற்போது உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து ஸ்டாலினின் நிலைபாட்டிற்கும், தங்களின் நிலைபாட்டிற்கும் வேறுபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்டாலின் அவர்களது போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் என உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்த நிலையில், தங்களுக்குள் இருக்கும் வேறுபாட்டையும் குறிப்பிட்டார்.
சஞ்சய் ராவத் இதுகுறித்து கூறுகையில், "இந்தி திணிப்புக்கு எதிரான அவர்களின் நிலைப்பாடு என்னவென்றால், அவர்கள் இந்தி பேசமாட்டார்கள், யாரையும் இந்தி பேச விடமாட்டார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் அது எங்கள் நிலைப்பாடு அல்ல. நாங்கள் இந்தி பேசுகிறோம்... தொடக்கப் பள்ளிகளில் இந்தி திணிப்பை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு. எங்கள் போராட்டம் இதற்கு மட்டுமே" என்றார்.
மேலும், "நாங்கள் இந்தி திரைப்படங்கள், இந்தி நாடகங்கள், இந்தி இசை கேட்கிறோம், யாரும் இந்தியில் பேசுவதை நாங்கள் தடுக்கவில்லை... எங்கள் போராட்டம் தொடக்கக் கல்வியில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்ப்பது மட்டுமே..." என்றார். உத்தவ் தாக்கரே தரப்பின் இந்த நிலைப்பாடு INDIA கூட்டணியில் நிலவும் வேறுபாட்டை காட்டுவதாக தேசிய அரசியலை உற்று கவனிப்போர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ