)
Delhi Car Blast Terror Incident: டெல்லி செங்கோட்டை பகுதியில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி மாலையில் ஹூண்டாய் i20 கார், போக்குவரத்து சிக்னலில் மெதுவாக நின்ற சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து, இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (நவ. 12) மாலை டெல்லியில் கூடியது. டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், கொடூரமான பயங்கரவாத சம்பவம் என்று குறிப்பிட்டு அச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை நீதியின் முன் நிறுத்தும் என்றும் மத்திய அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இந்த பயங்கரவாத சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு அமைச்சரவையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அமைச்சரவை கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரங்களை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், "நவம்பர் 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் குண்டுவெடிப்பு மூலம் தேசவிரோத சக்திகளால் நடத்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவத்தை நாடு எதிர்கொண்டது" என குறிப்பிட்டார். மேலும் அவர், "அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான இந்த கொடூரமான, கோழைத்தனமான செயலை அமைச்சரவை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. பயங்கரவாதம் எந்த வடிவங்களிலும் வந்தாலும், அவற்றை சகித்துக்கொள்ளவே முடியாது என்ற கொள்கையில் நாட்டின் உறுதிப்பாட்டை அமைச்சரவை மீண்டும் வலியுறுத்துகிறது" என்றார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர், தற்போதைய பாதுகாப்பு சூழலை மறுஆய்வு செய்வதற்கும், தாக்குதல் தொடர்பான விசாரணையை கண்காணிப்பதற்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தையும் பிரதமர் மோடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை, பயங்கரவாத சம்பவம் என உறுதிசெய்த நிலையில், விசாரணையில் இதுவரை வெடித்த காரை இயக்கி உயிரிழந்ததாக கருதப்படும் உமர் நபியைச் சேர்த்து மொத்தம் 6 மருத்துவர்கள் இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் வளர்க்கத்தெடுக்கப்படும் பயங்கரவாதிகள் குறித்த தனது முந்தைய எச்சரிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து ப. சிதம்பரம் அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், "பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னரும், அதற்கு பின்னரும் இரண்டு வகையான பயங்கரவாதிகள் உள்ளனர் என்பதை நான் உறுதியாகக் கூறி வருகிறேன். வெளிநாட்டில் இருந்து பயிற்சி பெற்று நாட்டில் ஊடுருவிய பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டில் இருந்து வளர்த்தெடுக்கப்படும் பயங்கரவாதிகள். ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் நான் இதை கூறியிருந்தேன். உள்நாட்டில் இருந்து வளர்க்கப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த எனது பேச்சுக்காக நான் கேலி செய்யப்பட்டேன்.
I have maintained before and after the Pahalgam terror attack that there are two kinds of terrorists -- foreign-trained infiltrated terrorists and home-grown terrorists
— P. Chidambaram (@PChidambara) November 12, 2025
I said so in Parliament during the debate on Operation Sindoor
I was mocked and trolled for the reference to…
இருப்பினும், உள்நாட்டில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட பயங்கரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது அரசுக்கு தெரியும் என்பதால் மத்திய அரசு ஒரு விவேகமான மௌனத்தை கடைப்பிடித்தது என்று நான் இங்கு சொல்லியாக வேண்டும். இந்த பதிவின் நோக்கம் என்னவென்றால், இந்திய குடிமக்களை, அதாவது படித்தவர்களைக் கூட பயங்கரவாதிகளாக மாற்றும் சூழ்நிலைகள் என்ன என்பதை நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்" என்ற முக்கிய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். நாட்டின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விவாதித்து வரும் வல்லுநர்கள் கூட மத்திய அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ