)
Petal Gahlot: ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் மிஷனின் முதல் செயலாளர் பெடல் கெலாட் தான் இப்போது டிரெண்டிங். ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார், பெடல் கெலாட்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் (UNGA) இந்தியாவின் பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி, இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றங்கள் குறித்த ஷெரீப்பின் கூற்றுகளை மறுத்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பெடல் கெலாட் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் என்ன பேசினார், அதற்கு இந்திய செயலாளர் பெடல் கெலாட் என்ன பதிலடி கொடுத்தார், பெடல் கெலாட் என்பவர் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80வது அமர்வு கடந்த செப். 9ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இந்த 80வது அமர்வின் உயர்மட்ட பொது விவாதம் கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கியது. வரும் செப். 29ஆம் தேதி வரை நடைபெறும் இந்தாண்டுக்கான விவாதம், 'ஒன்றாகச் சிறப்பாகச் செயல்படுங்கள்: அமைதி, வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்' என்ற முக்கிய கருப்பொருளின் கீழ் நடைபெற்று வருகிறது.
ஐ.நா.வின் இந்த விவாதத்தில் பல்வேறு நாட்டு தலைவர்கள் உரையாற்றி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமரும் உரையாற்றியிருந்தார். பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை குறிப்பிட்டு பல்வேறு உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியிருந்தாக இந்தியாவின் தரப்பில் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன.
ஐ.நா.வில் ஷெபாஸ் ஷெரீஃப், "இந்த ஆண்டு மே மாதம், எங்கள் நாட்டின் கிழக்கு பகுதியில் திடீர் தாக்குதலை எங்கள் நாடு எதிர்கொண்டது. எதிரி பெரும் ஆணவத்துடன் சூழந்த நிலையில், நாங்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து திருப்பி அனுப்பினோம்.
பகல்காம் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற எனது உண்மையான வாதத்தை நிராகரிப்பதன் மூலம், மனித துயரத்தில் இருந்து அரசியல் ஆதாயங்களைப் பெற இந்தியா முயன்றது. அதற்கு பதிலாக, அது எங்களது நகரங்களைத் தாக்கி, அப்பாவி பொதுமக்களை குறிவைத்தது. எங்களின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை மீறப்பட்டபோது, எங்களது பதிலடி ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரிவு 51 இன் கீழ் சுய பாதுகாப்பு உரிமைக்கு உட்பட்டே இருந்தது" என பேசியிருந்தார்.
அதாவது, பகல்காம் தாக்குலை தொடர்ந்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பொதுமக்களை குறிவைத்ததாக அவர் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்தார். மேலும், பாகிஸ்தானை இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து திருப்பி அனுப்பியதாகவும் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில்தான், இந்தியாவின் பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி, ஷெபாஸ் ஷெரீஃப்பின் தவறான சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஐ.நா., பொதுச்சபையில் பெடல் கெலாட் அதிரடியான பதிலடியை கொடுத்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து பாதுகாப்பதாகவும், தோல்வியை வெற்றியாக சித்தரிக்க அவர்கள் முயற்சிப்பதாகவும் கெலாட் குற்றம் சாட்டினார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது, அதன் விமான தளங்கள் அழிக்கப்பட்ட பின்னர், இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியதே பாகிஸ்தான் ராணுவம் தான் என்று கெலாட் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. மேலும் கெலாட், "பிரதமர் மோடி கூறியது போல், அழிக்கப்பட்ட விமானத்தின் ஓடுபாதைகள், விமானங்கள் நிறுத்திவைக்கப்படும் இடங்கள் தீக்கிரையாகியது வெற்றி என எடுத்துக்கொண்டால் பாகிஸ்தான் அதை கொண்டாடலாம்" என மறைமுகமாக சாடினார்.
இந்தாண்டில் முன்பு நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பகல்காம் தாக்குதலுக்கு காரணமான The Resistance Front (TRF) பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்ததையும் கெலாட் தற்போது குறிப்பிட்டு பேசியிருந்தார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் தானும் இருப்பதாகக் கூறிக் கொண்ட பாகிஸ்தான், பத்தாண்டுகளாக ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்து பேசினார். மேலும், பாகிஸ்தான் நாடுதான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பாகிஸ்தானுடனான அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளும் இருதரப்பு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இடமளிக்கக்கூடாது என்று கெலாட் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தைக்கு ஷெரீஃப் அழைப்பு விடுத்த நிலையில், கெலாட் அதை எதிர்த்து பேசினார். பாகிஸ்தான் முதலில் பயங்கரவாத முகாம்களை ஒழித்து, தேடப்படும் பயங்கரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதற்கு பிறகே பேச்சுவார்த்தை என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் அறிவியல், மொழிபெயர்ப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்றவர், பெடல் கெலாட். கெலாட் மும்பையில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (2005-2010) பயின்றுள்ளார். தொடர்ந்து, டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் (2010-2012) பெற்றுள்ளார்.
அதன் பின்னர், அமெரிக்காவின் மான்டேரியில் உள்ள மிடில்பரி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் மொழி விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டம் (2018-2020) பெற்றிருக்கிறார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை வரை வெளியுறவு அமைச்சகத்தின் ஐரோப்பிய மேற்கு பிரிவின் துணைச் செயலாளராக பணியாற்றினார். அப்போது அவர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலும் உள்ள இந்திய தூதரகங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.
அவர் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினருக்கான மிஷனில் முதல் செயலாளராக சேர்ந்தார். தொடர்ந்து, கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அவர் ஐ.நா.வில் ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவரது தொழில்முறை சாதனைகளுக்கு அப்பால், கெலாட் இசைக்கலைஞரும் ஆவார். கெலாட் கிட்டார் வாசிக்கும் வீடியோக்களை அவர் அடிக்கடி சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு வந்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ