)
Heavy Rain In Delhi: கடந்த மூன்று நாள்களாகவே நாட்டின் தலைநகரில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் பெரியோர்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தொடர் மழையால் யமுனை நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகனங்கள் மிதந்தபடியே நகர்கின்றன. இன்னும் சில நாள்களுக்கு மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் மக்கள் தொடர்ந்து வீடுகளில் முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியை சுற்றி கடுமையாக மழை பெய்தாலும் ஹரியானா குருகிராம் நகரின் நிலைமையும், உத்தர பிரதேசத்தின் நொய்டாவின் நிலையும் வெவ்வேறாக காட்சியளிக்கிறது. இரண்டு நகரங்களுக்கு நடுவே டெல்லி இருக்கிறது. குருகிராமில் வாகனங்கள் சாலையில் ஊர்ந்தே செல்கின்றன, முக்கிய சாலைகளில் பல கி.மீ., தூரத்திற்கு கார்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. பல மணிநேரமாக ஒரே இடத்தில் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். 100 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. இதன்மூலம், சுமாரான மழைக்கே குருகிராம் எந்தளவிற்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.
மறுபுறம் நொய்டா ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கையில் நீடிக்கிறது. வேலைவாய்ப்புகள், குடியிருப்புகள் ஆகியவற்றில் குருகிராமை ஒப்பிடும்போது நொய்டா பெரிய சிக்கல் ஏதுமில்லாமல் இருக்கிறது. வெள்ள நீர் தேங்குவதோ, போக்குவரத்து நெரிசலோ குறைந்தளவில்தான் இருக்கிறது. ஏன் குருகிராம் அதிக பாதிப்பையும், நொய்டா ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்பையும் பெறுகிறது என்றால் மழையின் அளவை விட இந்த இரண்டு நகரங்களும் உருவான கதையைதான் சொல்ல வேண்டும்
முதலில் நொய்டா குறித்து காணலாம். நொய்டா நகரம் அவசரநிலை காலகட்டமான 1975ஆம் ஆண்டில் உருவானது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி தொழிற்சாலைகள் அனைத்தையும் டெல்லியின் புறநகர் பகுதிக்கு கொண்டுச் சென்றபோது நொய்டா உருவானது. உத்தர பிரதேச தொழிற்சாலை பகுதி மேம்பாடு சட்டத்தின்படி 1976, New Okhla Industrial Development Authority என்ற ஆணையம் இந்த புதிய நகரத்தை நிர்வகிக்கிறது.
ஒரே கட்டமாக நில கையகப்படுத்தப்பட்டது. 50 கிராமங்களில் சேர்த்து 15 ஆயிரம் ஹெக்டர் நிலம் அந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மொத்தம் 81 கிராமங்களில் 20 ஆயிரம் ஹெக்டராக விரிவாகி உள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட உடனே அவற்றில் எங்கெல்லாம் சாலை, தெருவிளக்குகள், வடிகால்கள், கழிவுநீர் ஓடைகள், நடைபாதைகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகள் வரும் என்பதைதான் முதலில் திட்டமிட்டு உருவாக்கினாரே. அதன்பின்னரே கட்டமைக்கப்பட்ட கட்டத்தில் இருந்து நகரம் வளர்ச்சியடைந்தது. நொய்டா மிகவும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரமாகும். வடிகால் மற்றும் சாலைகள் கட்டடங்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டன.
குருகிராம் இதற்கு நேர்மாறானது எனலாம். ஹரியானா அரசு சில சட்டங்களில் அடிப்படையில் இந்த நகரத்தை அமைப்பதற்கான கதவை திறந்துவிட்டது. தனியார் நிறுவனங்கள்தான் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தினர். அரசு உள்கட்டமைப்புகளை கொண்டுவருவதாக தெரிவித்திருந்தது, ஆனால் மற்ற விஷயங்கள் தனியார் வசம் இருந்தது. இதனால் வீட்டு மனைகள் சிதறியும், ஒழுங்கற்ற வகையிலும் இருந்தன. சாலைகள் பெரும்பாலும் முட்டுச்சந்தாக இருந்தன. அரசு வெளிப்புற கட்டமைப்புகளை கொண்டுவந்தாலும், தனியார் அவற்றின் வேலையை சரியாக செய்யாதது பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. முறையான கட்டமைப்பே இல்லை.
குருகிராம் அமைந்திருக்கும் நிலப்பகுதியும் சிக்கலுக்குரியது எனலாம். நகரின் தெற்கே உள்ள ஆரவல்லி மலைத்தொடர் உயர்ந்து நிற்கிறது. மேற்கு டெல்லியில் உள்ள நஜாப்கர் ஏரியை நோக்கி மழைநீர் கீழ்நோக்கி ஓடும். ஒரு காலத்தில் இயற்கை வடிகால் வாய்க்கால்கள் இருந்தன. அந்த வாய்க்கால்கள் இப்போது போய்விட்டன. கட்டுமானங்கள் இடைவெளிகளை நிரப்பிவிட்டதால், தண்ணீர் எளிதாக வெளியேற வழி இல்லாமல் போய்விட்டது. மூன்று நாள்கள் மழையில் நவீன கால நகரம் என்று கூறப்படும் குருகிராம், அதன் பலவீனமான முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
70களில் திட்டமிடப்பட்ட நொய்டா இன்னும் பலமாக காட்சியளிக்கிறது. திட்டமிடப்பட்ட கட்டமைப்புகள் மழைநீரை வெளியேற்றிவிடுகின்ற. சாலைகள் மழையால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு பருவத்திலும் வேறுபாடு கூர்மையாக வளரும். அருகருகே இரண்டு நகரங்கள். நொய்டா மற்றும் குருகிராம் ஆகியவை அருகருகே இருந்தாலும் அவற்றின் இயல்பு வெவ்வேறாக இருப்பதற்கு இவையே காரணம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ