)
முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு இன்று பிறந்தநாள். இவர், முத்தமிழ் அறிஞர் மட்டுமல்ல, டைமிங்கில், ரைமிங்க் ஆக பேசுவதிலும் வல்லவர். அரசியல் ஆளுமையில் சிறந்து விளங்கிய இவர், எதிர்கட்சிகளை நையாண்டி பேசி, ஆஃப் செய்வதிலும் சிறந்தவராக இருந்தார். இவருடன் உரையாடய பலரும், இவரது சொல்லாற்றலை கண்டு வியந்து போயிருக்கின்றனர்.
பத்திரிகையாளர்கள் பலர், கலைஞரிடம் கேட்ட சுவாரஸ்யமான கேள்வி பதில் தொகுப்பினை இங்கு பார்ப்போம்.
கேள்வி : கோழி முதலா? முட்டை முதலா?
கலைஞர் பதில் : “முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும், கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல்”
கேள்வி : ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்திற்குள் போகும் போது நீங்கள் நினைப்பது என்ன?
கலைஞர் பதில் : கற்றுக்கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று
கேள்வி : இளம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?
பதில் : இளம் வயதில் அரசியல் என்பது, அத்தைப்பெண் போல. பேசலாம், பழகலாம், சுற்றி சுற்றி வரலாம், ஆனால் தொட்டுவிடக்கூடாது.
இப்படி கலைஞர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அடுத்தடுத்து யோசிக்காமல் காலம் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், கணவனை இழந்த பெண்களை ‘விதவை’ என்றுதான் குறிப்பிடுவர். ஆனால், அந்த சொல்லுக்கு எதிராக இருந்தவர், கலைஞர். 1985ஆம் ஆண்டில், பிரபல பத்திரிகையில் கவிதை ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில், “விதவை என்று எழுதுகிறேன், எழுத்தி கூட பொட்டு வைக்க முடியவில்லை. சமுதாயம் மட்டுமல்ல, மொழியும் உங்களை வஞ்சித்து விட்டது” என்று எழுதப்பட்டு இருந்தது. அதற்கு, கலைஞர் கருணாநிதி பதில் எழுதினார்.
”விதவை” என்பது வடமொழிச்சொல்; தமிழ்மொழியில், ‘கைம்பெண்’ என எழுதினால், ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்; தமிழ் வஞ்சிக்காது, வாழ வைக்கும்” என்று தமிழ் மொழியையும் கணவனை இழந்த பெண்களையும் பெருமை படுத்தி பேசியிருந்தார்.
மேற் கூறியவை மட்டுமல்ல, கலைஞர் சட்டமன்றத்திலும், கட்சி மேடைகளிலும் பல தக் லைஃப் சம்பவங்களை செய்திருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
கலைஞர் கருணாநிதி, கதை, வசனம் எழுதிய திரைப்படம் பூமாலை. இந்த படத்தின் பல காட்சிகளை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் நீக்கியது. இதையடுத்து சென்சார் போர்ட் அலுவலகத்திற்கு சென்ற கருணாநிதி, “என்னை இப்படி மாடிபடி ஏறவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே?” என்று கேட்டாராம். “நீங்கள்தான் நாத்தீகவாதியாச்சே, அதனால பழனி திருப்பதியெல்லாம் போகமாட்டீங்க.அதனாலதான் இந்த படி ஏற வைக்குறோம்” என்று கலாய்த்தனர். அதற்கு பதிலளித்த கலைஞர், “அங்கு போனாலும் மொட்டதான் அடிக்குறாங்க; இங்கேயும் எனக்கு நீங்க மொட்டதான் அடிக்குறீங்க” என கூறினாராம்.
கலைஞரின் பள்ளி காலத்தில், திருமுருக கிருபானந்த வாரியார், திருவாரூருக்கு அடிக்கடி காலட்சேபம் வருவாராம். அப்போது பள்ளிக்கு செல்லாமல், அங்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் கலைஞர். வாரியார் ஒரு முறை, “உயிருள்ள எதையும், மிருகமோ-பறவையோ மனிதன் கொன்று தின்பதற்கு கடவுள் படைக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார். அதற்கு கலைஞர் எழுந்து, “சிங்கத்துக்கு கடவுள் என்ன உணவு படைத்தார்?” என்று கேட்டிருக்கிறார். மேலும், “தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதை சாப்பிடலாமா?” என பல பேர் கேட்டார்களாம். “காய்கறிகளை பறித்த பின்பும், அவற்றின் வளர்ச்சி தடைபடுவது இல்லை. எனவே மனிதன் தாராளமாக சாப்பிடலாம்” என்றிருக்கிறார் வாரியார். கலைஞர், “மனிதன் இதனை தாராளமாய் சாப்பிடலாம் என்றால், கீரைத்தண்டை வேரோடு பிடுங்கி சாப்பிடுகிறோமே, அது எப்படி?” என்று கேட்க, வாரியார் அப்போது இவரை அடக்கி உட்கார வைத்திருகிறார். வளர்ந்த பின், வாரியர் சுவாமிகளை கலைஞர் அடிக்கடி சந்தித்திருக்கிறார். ஆனால், இவர் கேட்ட கேள்விகளுக்கு அவர் ஒரு முறையும் பதில் கொடுத்ததில்லையாம்.