)
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனது வித்தியாசமான நகைச்சுவையால் பிரபலமான நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அரசியல்வாதி தொடங்கி, திரையுலகில் உள்ள பலரும் அவருக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது நிறைவேறாத கடைசி ஆசை குறித்த தகவல் வெளியாகி பலரையும் மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜீத், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தீவிர ரசிகராகவும், ஒரு பக்தனாகவும் உலக நாயகன் கமல்ஹாசனுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது. ஆனால், அந்த கனவு கடைசி வரை கனவாகவே போய் உள்ளது.
ரோபோ சங்கர் கமல்ஹாசனின் வெறும் ரசிகராக மட்டும் இல்லாமல், ஒரு தீவிரமான பக்தனாக இருந்துள்ளார். கமல் படம் வெளியாகும் நாட்களில் முதல் நாள் முதல் காட்சியை திரையரங்கில் பார்ப்பது, பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என ஒரு சராசரி ரசிகனை போலவே நடிகர் ஆன பின்பும் தனது அன்பை வெளிப்படுத்துவார். அவர் எந்த அளவிற்கு தீவிர ரசிகர் என்றால், கமலின் ஆளவந்தான் திரைப்படம் வெளியானபோது, அவரை போலவே மொட்டையடித்துக்கொண்டு அதே கெட்டப்பில் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணத்தை முன்னின்று நடத்தியது முதல், அவரது பேரனுக்கு நட்சத்திரன் என்று பெயர் சூட்டியது வரை அனைத்துமே கமல்ஹாசன் தான். அந்த அளவிற்கு ரோபோ சங்கரின் குடும்பத்திலும் கமல் ஒரு பிரிக்க முடியாத பந்தமாக இருந்துள்ளார்.

பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருந்தாலும், ரோபோ சங்கருக்கு தனது ஆசான் கமல்ஹாசனுடன் ஒரேயொரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான் வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. இந்த தகவலை அவரது நெருங்கிய நண்பரும், சக கலைஞருமான மதுரை முத்து, கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கமலின் வெறித்தனமான ரசிகனாக இருந்தும், அவரால் தன் தலைவனுடன் ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக்குறைவால் காலமான ரோபோ சங்கரின் உடலுக்கு, நேற்று இரவு முதலே திரையுலகினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் தனுஷ், முதல் ஆளாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் விஜய் சேதுபதி, டி. ராஜேந்தர், விஜய் ஆண்டனி, சூரி என பலரும் நேரில் வந்து தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ