)
Actor Srikanth Arrested In Narcotics Case: போதைப்பொருள் தொடர்பான வழக்கு ஒன்றில் நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கடந்த 4 மணிநேரங்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அவருக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Actor Srikanth Arrested: போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி
அந்த வகையில், ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள ரத்த மாதிரி மருத்துவப் பரிசோதனையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மெத்தம்பெட்டமைன், கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், அவர்களிடம் 45 நாள்களுக்குள் மருத்துவ பரிசோதனை செய்து அவர்கள் பயன்படுத்தினார்களா இல்லையா என்பதை கண்டறியலாம்.
Actor Srikanth Arrested: நடிகர் கிருஷ்ணாவும் சிக்குவாரா?
அதன்படியே, போலீசார் ஸ்ரீகாந்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பரிசோதனையில் போதைப் பொருள் உட்கொண்டது உறுதியாகி உள்ளது. அது உறுதியான பின்னரே போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த வழக்கில் 'கழுகு' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், இயக்குநர் விஷ்ணு வர்தனின் தம்பியுமான கிருஷ்ணாவுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் கிருஷ்ணா கேரளாவில் திரைப்பட படப்பிடிப்பில் உள்ளார். எனவே அவரையும் விசாரணைக்கு அழைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் விசாரணைக்கு ஆஜரானால் அவரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வாய்ப்புள்ளது. அதன்பிறகே அவர் கைது செய்யப்படுவாரா இல்லையா என்பது தெரியவரும்.
Actor Srikanth Arrested: வழக்கின் முழு பின்னணி
இவர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகில் பலரும் இந்த வழக்கு விவகாரத்தில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த வழக்கின் முழு பின்னணியை இங்கு காணலாம். கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் அடிதடி பிரச்னை ஏற்பட்டது. இதில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியும், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்ததவருமான பிரசாத் கைது செய்யப்பட்டார். அவர் மட்டுமின்றி மற்றொரு அதிமுக பிரமுகரான அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோரையும் போலீசாரால் இந்த விவகாரத்தில் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைகையை தொடர்ந்து, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அதிமுக நிர்வாகியாக இருந்த பிரசாத் மீது வரத் தொடங்கின. மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் காவல் நிலையங்களில் பிரசாத் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரசாத் மீதான தொடர்ச்சியான புகாரை தொடர்ந்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் இருந்தே நீக்கி அறிவித்தார்.
Actor Srikanth Arrested: பிரதீப் குமார் அளித்த வாக்குமூலம்
இதில் பிரசாத் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. போதைப் பொருளை யாரிடம் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். தொடர்ந்து கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமார் என்பவரிடம் இருந்துதான் பிரசாத் கொக்கைனை பெற்றார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து பிரதீப்பிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிரதீப் அளித்த வாக்குமூலத்தில்தான் ஸ்ரீகாந்தின் பெயர் வெளிவந்துள்ளது.
குறிப்பாக, பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்த்தை வைத்து 'தீங்கரை' என்ற திரைப்படத்தை தயாரித்து வந்ததாகவும், அப்போது நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் தேவைப்படுவதாக பிரசாத் தன்னிடம் இருந்து வாங்கி சென்றதாக பிரதீப் குமார் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீகாந்தம் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவும் போதை பொருள் பயன்படுத்துவதை பார்த்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதீப் காவல்துறையிடம் தெரிவித்ததாகவும் கூறப்டுகிறது.
Actor Srikanth Arrested: ஒரு கிராம் ரூ.12 ஆயிரம்
அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள கிளப் மற்றும் பார்ட்டிகளில் இந்த கோக்கைன் போதைப் பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தி வந்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும், பிரதீப் பல்வேறு திரைத்துறையினர் பங்கேற்கும் பார்டிகளுக்கும் போதைப்பொருளை விநியோகித்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இதில் பிரசாத்திடம் ஒரு கிராம் கொகைன் போதை பொருளை 12,000 ரூபாய்க்கு நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து நடிகர் கிருஷ்ணாவும் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வருவார் என கூறப்படுகிறது. இது சினிமா வட்டாரத்தில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'ரோஜாக்கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். அதேபோல், நடிகர் கிருஷ்ணா 1992ஆம் ஆண்டு 'அஞ்சலி' திரைப்படத்தில் சிறுவன் கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு அலிபாபா திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து இவர் கழுகு, யாருமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன், வன்மம், யட்சன், யாக்கை, பண்டிகை, விழித்திரு, மாரி 2, கழுகு 2 உள்ளிட்ட பல திரைப்படங்கலில் நடித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ