விக்ரம் நடிப்பில் உருவாகி, வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கி உள்ள நிலையில், விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ். ஜே, சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் தனது உடலை வருத்தி நடிக்கிறார் என்றால் அது விக்ரம் தான். ஒரு பக்கம் தூள், தில் போன்ற கமர்சியல் படங்களை நடித்தாலும் அவ்வபோது தெய்வ திருமகள், பிதாமகன் போன்று கதைக்கும், நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிப்பது அவருடைய சிறப்பாகும். நடிகர் விக்ரமிற்கு தனிப்பட்ட ரசிகர்களை விட மற்ற ரசிகர்களின் ரசிகர்களும் அதாவது பொதுவான ரசிகர்களும் இவருக்கு உண்டு.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியாகிய தங்கலான் திரைப்படம் சரியாக போகாததால், தற்போது வெளியாக இருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் விக்ரம், ஹைதராபாத்தில் நடந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு எஸ். ஜே. சூர்யா குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், வீர தீர சூரன் படத்தில் தூள், சாமி என்ற படத்தில் நடித்தது போல மாஸாக நடித்திருக்கிறேன். அப்படிதான் இந்த படமும் அமைந்திருக்கிறது. நான் இயக்குநர் அருண்குமாரிடம், என்னுடைய ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அவர்களுக்கான ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என கூறினேன். நானும் அருணும் வீர தீர சூரன் படத்தில் முழுக்க முழுக்க வேலை செய்து இருக்கிறோம்.
இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா நடிக்கிறார் என உறுதியானதும் என மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான பரிமாணங்கள் இருக்கும். எஸ். ஜே, சூர்யாவும் நானும் ஒரே கல்லூரியில்தான் படித்தோம். அவரது இயக்கத்தில் வெளியான வாலியும், நான் நடித்த சேது படமும் ஒரே காலக்கட்டத்தில்தான் வெளியானது. அந்த படங்களுக்கு நாங்கள் பல விருதுகளை வென்றோம். அதற்கு பின்னர் குஷி படத்தை இயக்கினார். பின்னர் அவரும் நடிக்க தொடங்கிவிட்டார். அவரது நடிப்பை பல முறை ரசித்து இருக்கிறேன்.
ஸ்பைடர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தபோது, அவ்வழியாக சென்றேன். அப்போது எஸ்.ஜே. சூர்யா மகேஷ் பாபுவுடன் நடிக்கிறார் என கூறினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தனது நடிப்பை மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார். மாநாடு, டான், மார்க் அண்டனி என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்தி வருகிறார். அதை பார்த்தபோது, ராபர்ட் டி நிரோ, அல்பசினோ ஆகியோர் எனக்கு நினைவுக்கு வந்தார்கள். இந்த படத்திலும் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு காட்சி, வசனத்துக்கும் தனித்துவத்தை அவர் கொண்டு வந்துவிடுகிறார். அவருடன் வேலை செய்த அனுபவம் என்னால் மறக்க முடியாதது என்றார்.
மேலும் படிங்க: ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!! எப்போது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ