நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி. அவரது கடைசி படமாக ' ஆர் பி எம் - R P M' படத்தின் முன்னோட்டம் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆர் பி எம் - RPM 'படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால், அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர் பி எம் ' ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார். பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது. எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் பேசுகையில், ''இந்த நாளில் எங்களுடைய ஆர் பி எம் படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதற்கு சிறந்த நாளாக கருதுகிறோம். நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவருடைய தாயார் ராஜலட்சுமி அம்மா அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார். இவரை விட வேறு யாரையும் சிறப்பு விருந்தினராக அழைக்க தோன்றவில்லை. அவர் இங்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் இயக்குநர் பிரசாத் பிரபாகர் நடிகர் டேனியல் பாலாஜியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில்.. எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்காக நன்றி தெரிவிப்பதற்காக டேனியல் பாலாஜியை காணொளி மூலம் சந்தித்தேன். அந்த சந்திப்பில் உங்களை நான் இதற்கு முன் மேடையில் பாடகியாக சந்தித்திருக்கிறேன் என்றார்.
அவர் மிகுந்த திறமைசாலி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. சினிமா நுணுக்கங்களை பற்றியும்... நடிப்பு திறன்களை பற்றியும் .. திரை தோன்றலை எப்படி சக நடிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், திரை தோற்றத்தின் போது ரசிகர்களை நடிப்பால் ஆக்கிரமிப்பது எப்படி? என்ற நுட்பத்தையும் அறிந்தவர். அவர் பெரும்பாலும் நெகடிவ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். அதற்கு அவருடைய கண்கள் பிளஸ்ஸாக இருக்கும். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எளிமையாக இருந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது. மக்களுடைய மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜி போன்ற கலைஞர்களின் மறைவு என்பது பேரிழப்பாகும். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்'' என்றார்.
டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி பேசுகையில், '' டேனியல் பாலாஜி சின்ன குழந்தையாக இருக்கும்போதே ரொம்ப பக்தி. மூன்று வயதில் இருந்தே அவனுக்கு பக்தி அதிகம். ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது தேங்காய் பழம் பூ என இந்த பொருளை வாங்கிட்டு நடந்து வருவான். பஸ்ஸில் வரமாட்டான். காலேஜ் சென்ற பிறகும் அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவன் சம்பாதித்த பணத்தைக் கூட கோயிலுக்காகச் செலவு செய்தான். அவன் நடிச்ச படம். இதனை எல்லாரும் பார்த்து அவனை ஆசீர்வதிக்க வேண்டும். கௌதம் மேனன், பாலாஜி இவர்களெல்லாம் ஒன்றாக படித்தவர்கள்.
ஆரம்பத்தில் அவனுக்கு நடிப்பதில் விருப்பமில்லை. பிறகுதான் வந்தது. முதலில் அவர்கள் அப்பா வேண்டாம் என்று தான் சொன்னார். பிறகு 'வேட்டையாடு விளையாடு ' படத்தை பார்த்துவிட்டு அவர் சந்தோஷம் அடைந்தார். எப்போதும் அவன் ...அவன் இஷ்டப்படி தான் இருப்பான். கடைசி அஞ்சு நாளைக்கு முன்னாடி அவனுடைய பிராப்பர்ட்டி எல்லாம் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டார். கடைசி கட்டத்தில் அவன் பேசிய பேச்சுகளை கவனித்தேன். அவரிடம் பேச்சு கொடுத்த போது, 'நான் இருக்க மாட்டேனே!!' என்று சொன்னான். நான் இன்னும் இருக்கும்போது... அவன் இல்லையே!! என்ற குறை இப்போது என் மனதில் இருக்கிறது '' என்றார்.
இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில், ''அமரன் போன்ற வெற்றி படத்தை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆர் பி எம் படத்தை பான் இந்திய திரைப்படமாக வெளியிடுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டேனியல் பாலாஜி நடித்த திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரை இந்தப் படத்தில் மிகவும் ஷட்டிலாக நடிக்க வைத்திருக்கிறேன். அவருக்குள் ஒரு டைரக்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு ரைட்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு புரொடக்ஷன் கண்ட்ரோலர் இருக்கிறார். அவருக்குள் ஒரு சினிமாவுக்கான எல்லாம் இருக்கிறது. அவரை ஏமாற்றவே முடியாது. ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போதும் அந்த காட்சிக்கான முழு பின்னணியையும் கேட்டு தெரிந்து கொள்வார்.
குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் போது நான் என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என்பதனை கேட்டு தெரிந்து கொள்வார். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி நடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பார். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நிமிடங்களும் மறக்க முடியாதவை. சில பேருடைய அன் பிரசன்ஸ் ( Unpresense) தான் நமக்கு பிரசன்ஸ் ஆக இருக்கும். அவர் இல்லாமல் இருக்கும்போது தான் அவரை பற்றி நிறைய பேசுவோம். அந்த மாதிரி ஒரு மனிதர்தான் டேனியல் பாலாஜி. அவர் நடித்த இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. அவருடைய ஆசி இந்த படத்திற்கு இருக்கும். ரசிகர்களும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ