)
சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை". பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் விஜய் சுகுமார் பேசியதாவது, எங்களை வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்புமிகு பறை எங்கள் தயாரிப்பாளர் சுபா & சுரேஷ் ராம் தான் எழுதியுள்ளார்கள். பறையிசை ஒரு பொதுவான இசை அதை எப்படி திரையில் கொண்டுவந்துள்ளோம் என டிரெய்லரில் பார்த்தீர்கள். இரண்டு பாகங்களாக இப்படத்தைத் திட்டமிட்டுள்ளோம், முதல் பாகத்தில் பறை இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும், இரண்டாம் பாகத்தில் பறை இசை எத்தனை வகைப்படும் என்பதையும் சொல்லத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் பறை இசையை உலகம் முழுக்க கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் இப்படத்தை எங்கள் தயாரிப்பாளர்கள் தயாரித்தனர். இப்போது உலகம் முழுக்க பல விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு விருது வாங்கியுள்ளது. எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது. தேவா சார் அற்புதமான இசையைத் தந்துள்ளார். சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.
இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது, அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறக்கிறது என்பார்கள் இங்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஶ்ரீகாந்த்தேவா தேசிய விருது வாங்கி தேவாவைக் கௌரவப்படுத்தியுள்ளார். அதே போல நாயகன் லியோ அவர் அப்பா லியோனி போல அருமையாகப் பேசினார். பறை இசை நான் சின்ன வயதில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் கேட்டுள்ளேன். அது சாவுக்காக அடிக்கும் பறை இல்லை, சாமிக்காக அடிக்கும் பறை. சாமியிடம் செல்வதால் அதை அடித்து வழியனுப்புகிறார்கள். ஆதி தமிழனின் முதல் இசை பறை. ஃபாரினில் போய் நம் பாரம்பரியத்தைப் போற்றும் கதை எழுதி, அதைப் படமாக எடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். லியோனி அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆளுமை, அவர் பேச்சை நான் விரும்பிக் கேட்பேன். ஆணவக்கொலை என்பது எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருந்தே நடந்து வருகிறது. இன்னும் மாறவில்லை. அதனால் தான் ஆதரவு தரும் வகையில் திருமாவளவன் இந்த விழாவிற்கு வந்துள்ளார். எல்லோரும் மிகவும் கஷ்பட்டு இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது, மாண்புமிகு பறை இசை வெளியீட்டு விழா என்பதை விட மாண்புமிகு பறை தமிழர் பண்பாட்டுக் கூடல் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு இனத்தின் பண்பாடு குறித்து மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆற்றிய உரை நம்மை ஆழச் சிந்திக்க வைத்தது. பறை குறித்து நம்முடைய தமிழர் பண்பாடு எவ்வாறு இருந்தது நாகரிகம் அடைந்தது என்ற உரையாக இது அமைந்தது ஒவ்வொருவரும் ஆற்றிய உரைகள் பறை என்பது இன்றைக்கு ஒரு இழிவான சொல்லாக மாறி இருக்கிறது. அதனால் அந்த கருவியும் இழிவாகப் பார்க்கப்படுகிற சூழல் அமைந்துவிட்டது. அந்த கருவியால் ஒரு இனம் இழிவாகக் கருதப்படுகிறதா? அல்லது ஒரு இனத்தால் ஒரு சமூகத்தால் அந்த கருவி குறைத்து மதிப்பிடப்படுகிறதா ? என்று நமக்குத் தெரியவில்லை.ஆனால் இது ஆதி சிவன் அடித்த பறை என்று கவிஞர் சினேகன் அவர்களின் வரிகளில் அண்ணன் தேனிசை தென்றல் அவர்கள் அமைத்திருக்கிற இந்த பாடல் நம் கவனத்தை ஈர்த்தது.
மாண்புமிகு என்கிற பெருமைக்குரியது என்கிற வகையிலே இந்த திரைப்படத்திற்குப் பெயர் சூட்டி இருப்பது ஒரு துணிச்சலான செயல். போற்றுதலுக்குரிய செயல்.இயக்குநரின் துணிச்சலைக் கதை எழுதியவர்களின் துணிச்சலை நான் மனமாற பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் பறை என்பது ஒரு பொதுவான சொல் அனைத்து இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் மூலம் அதிலிருந்துதான் இசைக்கருவிகளின் வடிவங்கள் மாறி மாறி வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருக்கின்றன.இந்த சமூகத்தின் மூலச்சமகம் தான் பறை என்கிற பெயரில் அழைக்கப்படுகிற சமூகம் இது ஒரு சமூக ஆய்வாளரின் கருத்து. ஒரு குலத்திலிருந்துதான் எல்லா குலமும் என்கிற போது தமிழ் சமூகத்தில் அந்த மூல சமூகம் ஆதி குளம் பறையர் குளம்தான் என்று அந்த வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள்.
மாண்புமிகு பிரதமர் மாண்புமிகு முதலமைச்சர் என்று சொல்லுவது போல் மாண்புமிகு பறை என்று சொல்லுகிற அந்த துணிச்சல் அது ஒரு அரசியல் புரிதலிலிருந்து மட்டும் தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு படத்தில் தம்பி சிவா போன்றவர்கள் இன்றைக்கு நடித்திருக்கிறார்கள் என்றால் அண்ணன் லியோனி அவர்களிடம் அவர் கற்றுக்கொண்ட அரசியலும் தான் அதற்கு அடிப்படை. இந்த சாதிய கட்டமைப்பை எதிர்த்து நடத்திய யுத்தத்தின் எச்சங்கள், பதிவுகள் நாம இன்றைக்கு புதுசா பேசவில்லை. இதை ஐயன் திருவள்ளுவனே இந்த சாதி அமைப்பு கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது நீண்ட நெடிய ஒரு போராட்டமாக இருக்கிறது. அந்த போராட்டத்தை வெவ்வேறு வடிவங்களில் இன்றைக்கு நாம் மைய நீரோட்டத்தில் இணைக்கிற முயற்சி தான் இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. திரைப்படங்களில் இன்றைக்குப் புதிதாக இது வரவில்லை திரைப்படங்களில் நீண்ட காலமாகவே இதற்கு எதிரான படைப்புகள் நிறைய வந்திருக்கின்றன.
இந்த திரைத்துறையை நாங்கள் முற்போக்கு சிந்தனை களமாகப் பயன்படுத்துவோம் என்கிற அந்த ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்த திரைப்படத்தில் நாம் முழுமையாகப் பார்த்தால் தான் என்ன கதை கருப்பொருளாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். என்றாலும் கூட இந்த தலைப்பே நம்மை வியக்க வைக்கிறது. ஆழமா ஆள சிந்திக்க வைக்கிறது. அந்த வகையிலே இது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வைப்பதற்குத் தமிழ் சமூகம் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்போம் என்பதை இந்த நேரத்திலே சொல்லி, எனக்கு இந்த அறிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் லியோனி அவர்களுக்கும் இயக்குநர் விஜய் சுகுமாரன் தம்பி சிவா போன்றவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ